பாபா சித்திக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
மும்பை : மஹாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.மஹாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசில் மூத்த தலைவராக இருந்தவர் பாபா சித்திக், 66. முன்னாள் அமைச்சராக இருந்த இவர், கடந்த மாதம் 12ம் தேதி, மும்பை பாந்த்ரா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.மஹாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, இந்த வழக்கில் 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், சம்பவ தினத்தன்று பாபா சித்திக்கை சுட்டுக்கொன்ற நபரின் இருப்பிடம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி உத்தர பிரதேசத்தின் பஹூரைச் பகுதியில் இருந்த ஷிவ் குமார் என்பவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவருக்கு உதவிய மற்ற இருவரையும் போலீசார் கைது செய்தனர்.