உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் கமிஷனருடன் மானேசர் மேயரின் கணவர் சந்திப்பு

போலீஸ் கமிஷனருடன் மானேசர் மேயரின் கணவர் சந்திப்பு

குருகிராம்:குருகிராம் போலீஸ் கமிஷனரை சந்தித்த மானேசர் நகர மேயர் இந்தர்ஜீத் கவுரின் கணவர் ராகேஷ் யாதவ், தன் மீதும், தன் ஆதரவாளர்கள் மீதும் தொடரப்பட்டுள்ள போலீஸ் முதல் தகவல் அறிக்கையை வாபஸ் பெற வலியுறுத்தினார். மானேசர் அருகே ஹயத்பூர் என்ற கிராமத்தில், 6.8 ஏக்கரில் கட்டப்பட்ட கிடங்கு ஒன்றை அளக்க சென்ற அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்ததாக மனோசர் மாநகராட்சி மேயர் இந்தர்ஜீத் கவுரின் கணவர் ராகேஷ் யாதவ் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்த கிராமத்தினருடன், ராகேஷ் சிங் மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்கள் பலரும் இருந்தனர் என கூறப்பட்டுள்ளது. குருகிராம் போலீஸ் கமிஷனர் விகாஸ் அரோராவை சந்தித்த ராகேஷ் யாதவுடன் அவரது ஆதாரவாளர்கள் பலரும் சென்றனர். அப்போது பேசிய ராகேஷ் யாதவ் கூறியதாவது: அரசியல் காரணங்களுக்காக என் மீதும் என் ஆதரவு கவுன்சிலர்கள் மீதும் போலீசார் எப்.ஐ.ஆர்., போட்டுள்ளனர். என் இமேஜை அழிக்க பலரும் நினைக்கின்றனர். அதனால் தான் அவசரம் அவசரமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு நானே முன்வந்து ஆஜராக தயாராக உள்ளேன். ஆனால், என் தரப்பு நியாயத்தை கேட்க எந்த அதிகாரிகளும் தயாராக இல்லை. அதனால் தான், நானாக முன் வந்து போலீஸ் கமிஷனரை சந்தித்தேன். பல முறை தொடர்பு கொண்டும் எந்த போலீஸ் அதிகாரிகளும் என் போன் அழைப்பை எடுக்காததால், நானே கமிஷனரை சந்தித்து முறையிடுவது என வந்தேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து அழுதபடி மேயர் இந்தர்ஜீத் கவுர் கூறும் போது,''என்னையும், என் குடும்ப உறுப்பினர்களையும் அழிக்க ஹரியானா மாநில அமைச்சர் ராவ் நர்பிர் சிங் முயற்சிக்கிறார். அவரின் துாண்டுதலின் படி தான், கேர்கி தவுலா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது, போலீசாரின் அத்துமீறலை காட்டுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி