ஹிமாச்சலில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு; 200 மீட்டர் தொலைவு உருண்ட பாறைகள்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது, மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. ஹிமாச்சல் பிரதேசத்தில் பல வாரங்களாக கனமழை கொட்டி வருகிறது. இடைவிடாத மழையின் போது, நிலச்சரிவும் ஏற்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது. அடுத்து வரக்கூடிய 3 நாட்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய எச்சரித்துள்ளது.கடும் நிலச்சரிவுகள் காரணமாக, நான்கு தேசிய நெடுங்சாலைகள், 1087 சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. மீட்பு பணிகள் நடந்து வந்தாலும், மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.இந் நிலையில், சிம்லா, கின்னார் மாவட்டங்களில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. குறிப்பாக சிர்மர் நவ்ராதர் பகுதியில் உள்ள சவுகார் கிராமத்தில் கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரத்திற்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.நிலச்சரிவு ஏற்படும் போது அதில் 5 பேர் சிக்கிக் கொண்டதாகவும், தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் கூறி உள்ளனர். 5 வீடுகள் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அபாயம் காணப்படுவதால் மீட்புக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.