குர்கான் சுங்கச்சாவடி ஊழியர் கொலையில் இருவர் கைது
குர்கான் : அரியானா மாநிலம், குர்கான் பகுதி அருகே, சுங்கச்சாவடி ஊழியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக, இரண்டு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர், உமேஷ் குமார் பாண்டே, 22. இவர், அங்குள்ள கெர்கி தவுலா சுங்கச்சாவடியில் பணிபுரிந்து வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன், அதே பகுதியைச் சேர்ந்த விஜய் வீர், 24, சுங்கச்சாவடி சாலை வழியாக வந்துள்ளார். குடிபோதையில் இருந்த அவர், சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த மறுத்து, உமேஷ் குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த விஜய் வீர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால், உமேஷ் குமாரை சுட்டுக் கொன்றார்.
அதன்பின், இந்த தகவலை தனது நண்பர் மன்ஜீத், 34, என்பவருக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த மன்ஜீத், உமேஷ் குமாரின் சடலத்தைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். சுற்றுப் பகுதியில் யாரும் இல்லாததால், இரண்டு பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.
இதுதொடர்பாக, குர்கான் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவங்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டனர். அதில், விஜய் வீர் துப்பாக்கியால் சுடுவதும், மன்ஜீத் அங்கு வந்து சுற்றிப் பார்ப்பதும் தெளிவாக பதிவாகியிருந்தது.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். எனினும், விஜய் வீர் பயன்படுத்திய துப்பாக்கி குறித்த விவரங்கள் தெரியாததால், அவர்கள் இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதி வழங்கியது.