உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 ஆண்டாக பேரழிவில் சிக்கியுள்ள டில்லியை மீட்போம் பிரதமர் மோடி ஆவேச பேச்சு

10 ஆண்டாக பேரழிவில் சிக்கியுள்ள டில்லியை மீட்போம் பிரதமர் மோடி ஆவேச பேச்சு

“நாடு முழுதும் ஏழைகளுக்கு, கோடிக்கணக்கான வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளேன். ஆனால், எனக்காக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டது இல்லை. நினைத்திருந்தால் பிரம்மாண்ட கண்ணாடி மாளிகையே கட்டியிருக்க முடியும்'' என, பிரதமர் நரேந்திரமோடி பேசினார்.மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் கல்வித் துறை சார்பில் பல்வேறு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்.மத்திய வீட்டு வசதித் துறையின், 'ஸ்வாபிமான்' திட்டத்தின் கீழ், புதுடில்லி அசோக் விஹாரில் குடிசைவாசிகளுக்காக அடுக்குமாடி வீடுகள் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. வீட்டின் சாவியை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பிரதமர் நரேந்திரமோடி, துப்புரவுப் பணியாளர்களுக்கு வீட்டு சாவியை வழங்கி பேசியதாவது:நாடு முழுதும் ஏழைகளுக்கு இதுவரை 4 கோடிக்கும் அதிகமான வீடுகளைக் கட்டிக் கொடுத்துள்ளேன். ஆனால், எனக்காக ஒரு வீடு கட்டிக்கொண்டது இல்லை. நினைத்திருந்தால் பிரம்மாண்ட கண்ணாடி மாளிகையையே எனக்காக கட்டியிருக்க முடியும்.கடந்த 10 ஆண்டுகளாகவே தலைநகர் டில்லி மிகப் பெரிய பேரழிவில் சிக்கித் தவிக்கிறது. சமூக சேவகர் அன்னா ஹசாரேவை முன்னிறுத்தி சில மோசமான, நேர்மையற்றவர்கள், டில்லியை குழிக்குள் தள்ளி விட்டனர். டில்லி மாநகரின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. ஆனால், டில்லி அரசு பொய் பிரசாரத்துடன் பள்ளிக் கல்வித் துறை முதல் அனைத்து துறைகளையும் நாசப்படுத்தி வைத்திருக்கிறது. டில்லி அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.டில்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இந்தத் தேர்தலில் டில்லியைச் சூழ்ந்துள்ள பேரழவில் இருந்து காப்பாற்ற போர் துவக்கியுள்ளோம்.டில்லி மக்கள் இந்தப் போருக்கு தோள் கொடுத்து, தேர்தலில் ஆம் ஆத்மியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.இந்தப் புத்தாண்டில், தேசத்தை கட்டியெழுப்பும் மற்றும் மக்கள் நலன் சார்ந்த புதிய அரசியலை பா.ஜ., அறிமுகப்படுத்தும். எனவே, பேரழிவு சக்தியை அகற்றி, பா.ஜ.,வை ஆட்சி பீடத்தில் அமர வைக்க டில்லி மக்கள் முன்வர வேண்டும்.மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டமான 'ஆயுஷ்மான் பாரத்' உள்ளிட்ட பல திட்டங்களை டில்லி அரசு செயல்படுத்தவில்லை. அதனால், டில்லி மக்களுக்கு மத்திய அரசால் முழுமையாக உதவ முடியவில்லை.டில்லி மாநகரில் தரமான நெடுஞ்சாலைகள் மற்றும் வீடுகள் அமைய காரணம், துணைநிலை கவர்னரின் நிர்வாகத்தில் இயங்கும் டில்லி மேம்பாட்டு ஆணையம்தான். பேரழிவு சக்தி இந்த ஆணையத்தின் செயல்பாட்டில் தலையிட முடியாது. டில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், தான் வசித்த அரசு பங்களாவில் கோடிக்கணக்கில் செலவழித்து அரண்மணை போல மாற்றியமைத்தார்.ஆனால், ஏழைகளுக்கு உழைப்பதாக வெட்கமே இல்லாமல் ஆம் ஆத்மி பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்குகிறது.ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களுக்கு மானிய விலையில் வீடுகள் வழங்கு வேண்டும் என்பதே பா.ஜ., தலைமையிலான மத்திய அரசின் நோக்கம். அடுத்தகட்டமாக, நகர்ப்புற ஏழைகளுக்கு ஒரு கோடி வீடுகள் கட்டப்படும்.அதேபோல, மத்தியதர வர்க்கத்தினர் சொந்தமாக வீடு வாங்க, வீட்டுக் கடன் வட்டியில் மத்திய அரசு மானியம் வழங்குகிறது.கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசு, கல்வி மேம்பாட்டுக்காக, மத்திய அரசு அளித்த நிதியில், பாதியைக் கூட செலவு செய்யவில்லை. இந்த ஆபத்துக்கு எதிராக போர் தொடுக்க டில்லிவாசிகள் முன்வர வேண்டும். இந்த ஆபத்தில் இருந்து, டில்லியை காப்பாற்ற டில்லியில் வசிக்கும் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.இங்குள்ளவர்ககளில், சிலருக்கு மானிய விலையிலான இந்த வீடுகள் கிடைக்காமல் இருக்கலாம். இன்று இல்லாவிட்டாலும், நிச்சயமாக அவர்களுக்கும் வீடு வழங்கப்படும். அசோக் விஹாருக்கு நான் இன்று வந்திருப்பதன் மூலம், எனக்கு பழைய நினைவுகள் வருகின்றன. இந்திரா காலத்தில் கொண்டு வரப்பட்ட, நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட காலத்தில், நான் மட்டுமின்றி என்னைப்போன்ற எத்தனையோ பேர், நாடு முழுதும் தலைமறைவாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதே அசோக் விஹாரில்தான் நான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தேன். நம் நாடு இன்று, 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற ஒரு இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிரந்தர வீடு கிடைக்க வேண்டும் என்பதை நோக்கியே, பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். கனவு காணும் அந்த வளர்ந்த இந்தியாவில், ஒவ்வொரு குடிமகனுக்கும் வீடு கிடைக்கும். இது நிச்சயம் நடந்தே தீரும். இந்த மாபெரும் லட்சிய கனவை அடையும் முயற்சியில் டில்லிவாசிகளுக்கும் மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது.குடிசைவாசிகளுக்கு நிரந்தரமான பாதுகாப்பான வீடு கட்டித்தர வேண்டும் என்பதை மத்திய அரசு பிரசாரமாகவே செய்து வருகிறது. நாட்டின் வளர்ச்சியில் ஒவ்வொரு நகரங்களும் தன்னுடைய முக்கியப் பங்கை செலுத்துகின்றன குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள், மிகப்பெரிய கனவுகளுடன் நகரங்களுக்கு வருகின்றனர். அந்தக் கனவுகளை நிறைவேற்ற நேர்மையான வழிகளில் வாழ்க்கை நடத்துகின்றனர். எனவே, நகரங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும், மிக தரமான வீடு தர வேண்டும் என்பதில், மத்திய அரசு முனைப்புடன் இருக்கிறது.அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், மிகப்பெரிய பலத்துடன் இந்தியா திகழ்கிறது. சர்வதேச அளவில் நம் நாட்டின் சேவை 2025ம் ஆண்டில் மேலும் வலுப்பெறும். உலக அரங்கில் இந்தியா தனக்கான இடத்தை, மேலும் உறுதிப்படுத்தப் படுத்தும். உலக நாடுகளிலேயே மிகப் பெரிய உற்பத்தி திறன்கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்த ஆண்டில் மாறுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

டில்லி பல்கலைக்கு, சூரஜ்மல் விஹாரில் உள்ள கிழக்கு வளாகம், துவாரகா 22வது செக்டாரில் மேற்கு வளாகம் அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

கிழக்கு வளாகம், 15.25 ஏக்கரில் 373 கோடி ரூபாய் செலவில் 59,618 சதுர மீட்டர் பரப்பளவில் 60 வகுப்பறைகள், 10 பயிற்சி அறைகள், 4 கணினி ஆய்வகங்கள், 2 உணவகங்கள் இந்த வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, 107 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் மேற்கு வளாகத்தில், 19,434.28 சதுர மீட்டர் பரப்பளவில், 42 வகுப்பறைகள், டிஜிட்டல் லைப்ரரி, மாநாட்டு அறைகள், கருத்தரங்கு அரங்குகள் மற்றும் மாணவ - மாணவியருக்கு தங்குமிடங்கள் அமைக்கப்படுகின்றன. நஜாப்கர் ரோஷன்புராவில் வீர சாவர்க்கர் கல்லூரிக்கும் மோடி அடிக்கல் நாட்டினார். இந்தக் கல்லூரி, 18,816.56 சதுர மீட்டர் பரப்பளவில் 140 கோடி ரூபாய் செலவில் 24 வகுப்பறைகள், 8 பயிற்சி அறைகள், 40 ஆசிரியர் அறைகள், துறை நூலகங்கள், மாநாட்டு அறைகள் மற்றும் உணவகம் ஆகிய வசதிகளுன் கட்டப்படும். நமது டில்லி நிருபர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி