சமூக ஊடக பிரசார விளம்பரங்களுக்கு முன் அனுமதி அவசியம்: தேர்தல் கமிஷன்
புதுடில்லி, : பீஹார் சட்டசபை தேர்தலுக்கான சமூக ஊடக பிரசார விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன், அரசியல் கட்சிகள் முன் அனுமதி பெற வேண்டும் என, தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு, நவ., 6 மற்றும் 11ல், இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில், தேர்தல் தொடர்பாக மொத்தமாக குறுஞ்செய்தி, ஆடியோ செய்தி அனுப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், தொலைக்காட்சி, கேபிள் நெட்வொர்க், வானொலி, திரையரங்குகள் போன்றவற்றில், அரசியல் விளம்பரங்களை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன், ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம், பதிவு செய்யப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள், போட்டியிடும் வேட்பாளர்கள் முன் அனுமதி பெற வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி இல்லாமல், எந்தவொரு அரசியல் விளம்பரத்தையும் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் வெளியிடக் கூடாது. மீறினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகரித்து உள்ளதால், வேட்பாளர்கள் தங்களது அசல் சமூக ஊடக கணக்குகளின் விபரங்களை வேட்புமனு தாக்கலின் போது சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.