உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் சமயோசிதம்

பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறு கட்சிகள் சமயோசிதம்

தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை தக்கவைக்கவும், கட்சியை காப்பாற்றவும், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், சொந்த சின்னத்தில் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளன. பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டதால், தேர்தல் கமிஷனின் அங்கீகாரத்தை இழந்த கட்சிகளை பார்த்து, இந்த சமயோசித முடிவுக்கு வந்துள்ளன. தமிழகத்தில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூ., - இந்திய கம்யூ., - தே.மு.தி.க., - ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், தேசியவாத காங்கிரஸ் ஆகிய 12 கட்சி கள், தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவை தவிர்த்து, தேர்தல் கமிஷனில் பதிவு செய்து, அங்கீ காரம் பெறாத 295 கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகள், தேர்தலில் போட்டியிட்டு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகளை பெறும் போது, தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்படும். மாநில கட்சியாக அங்கீகாரம் பெற, நான்கு விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது.அதன்படி, சட்டசபை தேர்தலில், மொத்த தொகுதிகளில், 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். லோக்சபா தேர்தலில், மாநிலத்தில் உள்ள தொகு திகளில், ஒரு இடத்திலாவது வெற்றி பெற வேண்டும். லோக்சபா அல்லது சட்டசபை தேர்தலில், 6 சதவீத ஓட்டுகளுடன், ஒரு லோக்சபா அல்லது இரண்டு சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டால், 8 சதவீத ஓட்டுகளையாவது அக்கட்சி பெற்றிருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒரு விதிமுறையை பூர்த்தி செய்யும்பட்சத்தில், அந்த கட்சிக்கு, மாநில கட்சியாக தேர்தல் கமிஷன் அங்கீகாரம் வழங்கும். இந்த விதிமுறையின்படி, நடப்பாண்டு விடுதலை சிறுத்தைகள் மற்றும் நாம் தமிழர் கட்சிகளுக்கு, அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாடு முழுதும் ஆறு தேர்தல்களில் தனி சின்னத்தில் போட்டியிடாத மற்றும் தேர்தல் செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாத 475 கட்சிகளின் பதிவை, தேர்தல் கமிஷன் சமீபத்தில் ரத்து செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த கொ.ம.தே.க., - ம.ம.க., உள்ளிட்ட கட்சிகள், தேர்தல் கமிஷனின் பதிவை இழந்துள்ளன. இந்த பட்டியலில் உள்ள சில கட்சிகள், முந்தைய தேர்தல்களில், அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுள்ளன. ஆனால், தனி சின்னத்தில் போட்டியிடாமல், கூட்டணிக்கு தலைமை தாங்கும் பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிட்டன. தனி சின்னத்தில் போட்டியிடாமல், பெரிய கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்ததால், தேர்தல் கமிஷனின் பதிவு ரத்தாகியுள்ளது. இதனால், பெரிய கட்சிகளுடன் கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள், சின்னமே இல்லாமல் அங்கீகாரம் ரத்தான கட்சிகளை கண்டு, உஷார் அடைந்து உள்ளன. தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில், பெரிய கட்சிகளின் சின்னத்தில் போட்டியிடாமல், தனி சின்னம் பெற்று போட்டியிட்டு, கட்சியை காப்பாற்றும் சமயோசித முடிவுக்கு வந்துள்ளன. கூட்டணி கட்சிகளை தங்கள் சின்னத்தில் போட்டியிட வைத்து, தங்களது வெற்றி கணக்கை உயர்த்தி காட்டும் தி.மு.க., - அ.தி.மு.க., போன்ற பெரிய கட்சிகளுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தனி சின்னத்தில் போட்டியிட சிறிய கட்சிகளை அனுமதித்தால், அவற்றின் வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என்பதால், பெரிய கட்சிகள் கவலை அடைந்துள்ளன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ManiMurugan Murugan
செப் 23, 2025 22:28

அரசியல்வாதிகள் நன்கு உணர வேண்டும் கூட்டணி என்பது கட்சியை அடகு வைப்பது தான் வேறொன்றுமில்லை இது பீ டீ ம் களுக்கு இல்லை உண்மையில் மக்களுக்கு தொண்டு செய்ய கட்சி உருவாக்கியவர்கள் கூட்டணிக்கு போனால் தன்மானத்தை அடகு வைப்பதற்கு சமானம் அதான் தலைவர் ரஜினிகாந்த் யோசித்தது கஷ்டப்பட்டு ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி அதை கட்சியாக மாற்றும் போது முதுகில் குத்தியது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை விளம்பர மோக ஊழல் கட்சி தி மு க கூட்டணி.அப்பவும் கூட்டணிக்கு வந்தார்கள் தூது பொம்பளைய நம்பாதே இப்போது என்னத்துக்கு ஒப்பாரிஇன்றும் அதே நிலை தான் தலைவர் ரஜினிகாந்த் அவர்களுக்கு தலைவா வாழ்த்துக்கள் தலைவா எந்த நேரத்திலும் கூட்டணி கிடையாது உறுதி


சசிக்குமார் திருப்பூர்
செப் 23, 2025 18:36

தாராளமாக நிற்கலாம். கடைசி வரை கூட்டணியில் இருப்பதற்கான உத்தரவாதம். வேலை செய்ய கூட்டணி ஆட்கள் செலவுக்கு பணம் வராது


Rengaraj
செப் 23, 2025 15:28

ஜனநாயகம் தழைக்கவேண்டுமென்றால் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்த ஒரு கட்சி அங்கே மீண்டும் போட்டி போடக்கூடாது . அப்படி அந்த கட்சி அங்கே போட்டிபோடுவது இருக்கிற ஓட்டுக்களை பிரிப்பதற்கு உதவும். ஒரு சில சுயேச்சை வேட்பாளர்கள் தங்கள் கவுரவுத்துக்காகவும் , ஓட்டுக்களை பிரிப்பதற்காகவும் , அதன்மூலம் பெரிய கட்சிகளிடமிருந்து பணம் பெறுவதற்காகவும் , தொடர்ந்து போட்டிபோடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தொடர்ந்து மூன்று அல்லது நான்கு தேர்தல்களில் டெபாசிட் இழந்த சுயேச்சை வேட்பாளர் அந்த தொகுதியில் மீண்டும் போட்டிபோடக்கூடாது என்று இருக்கவேண்டும். அவர்களுக்கு செக் வைக்கவேண்டும். பெரிய கட்சியோ சிறிய கட்சியோ , என்னதான் கட்சி சார்பில் நின்றாலும் ஒரு சட்டசபை தொகுதிக்கு ஜெயிக்கும் அந்த வேட்பாளர்தான் எம்.எல். ஏ என்ற முறையில் பொறுப்பு. எனவே வேட்பாளர் தான் அளிக்கும் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்து சொல்வதற்கு முன்னால் அதை தேர்தல் கமிஷன் பிராமண பத்திரத்தில் எழுத்துவடிவில் தாக்கல் செய்யவேண்டும். நிறைவேற்ற முடியவில்லை என்றால் மக்கள் பிரதிநிதி சட்டத்தின் அடிப்படையில் பதவி விலகுவேன் என்று உறுதிமொழி பிராமண பத்திர வடிவில் அளிக்க வேண்டும்.


rajan_subramanian manian
செப் 23, 2025 09:55

எங்க தலைவர் உலக நாயகனுக்கு கவலை இல்லை. தேர்தலில் நின்றால் தானே சின்னம் தேவை.. ஜனநாயகத்தை காக்க இது மட்டும் போதும்


vbs manian
செப் 23, 2025 09:50

தன்மானம் என்று ஒன்று இருப்பதை பலர் மறந்துவிட்டனர்.


Balasubramanian
செப் 23, 2025 09:07

அதே போல் எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் பதிவான வாக்குகளில் மொத்தம் 51% வாக்கு பெறாமல் ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது என்று ஒரு ரூல் வேண்டும்! இல்லை எனில் 30 சதவிகிதம் வாக்கு பெறும் கூட்டணிகள் ஆட்சி அமைத்து விடுகிறார்கள்! பதினோரு வாக்குகள் அதிகம் பெற்று சட்ட மன்ற உறுப்பினர் ஆகி விடுகிறார்கள்!


Palanisamy Sekar
செப் 23, 2025 08:28

எப்படியாவது பதவி கிடைத்தால் போதும் என்று எண்ணிய கொ ம கட்சி, மனிதநேய மக்கள் கட்சி போன்ற தலைகளுக்கு பதவி இல்லை என்றால் தூக்கில் தூங்கிவிடுவார்கள். அதனால் அவர்களுக்கு இதுபற்றியெல்லாம் கவலையே கிடையாது. எம் எல் ஏ வாக இருந்தால் போதும், சைரன் வாய்த்த காரில் போகும் வாய்ப்பு பறிபோனால் அவர்களின் நிலைமையை யோசித்து பாருங்கள். தேர்தல் கமிஷன் மீது இன்னும் கோபம் கொள்ளும் அளவுக்கு அவர்களின் மனநிலையானது பயத்தில் உளள்து. ஒருக்காலும் இந்த சிறிய கட்சிகள் மாறாது. காரணம் அப்பாவி சாதி சனங்கள் இன்னும் அவர்களை நம்புவதுதான்


VENKATASUBRAMANIAN
செப் 23, 2025 08:18

இதிலென்ன சமயோசிதம். வேறு வழியில்லை. கட்சியை காப்பாற்ற வேண்டும். திருட்டு கும்பலுக்கு தேர்தல் ஆணையம் ஆப்பு வைத்து விட்டது.


நிக்கோல்தாம்சன்
செப் 23, 2025 07:16

புது திருப்பம்


Kasimani Baskaran
செப் 23, 2025 04:14

தீக்கவை நினைத்தால் தீம்காவுக்கு குலை நடுங்குகிறது. அறக்கட்டளை என்ன ஆகப்போகிறதோ என்ற திகில் வேறு..


முக்கிய வீடியோ