உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டிஜிட்டல் கைது வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் யோசனை

டிஜிட்டல் கைது வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம்: உச்ச நீதிமன்றம் யோசனை

'நாடு முழுதும், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் நடக்கும் சைபர் கிரைம் மோசடி குறித்து சி.பி.ஐ., விசாரிக்கலாம்' என, உச்ச நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், 'மொபைல் போன் வீடியோ' அழைப்பு மூலம், பொது மக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது. நாடு முழுதும் நடக்கும் இந்த வகை மோசடியால், அரசு அதிகாரிகள் முதல் சாதாரண மக்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். டிஜிட்டல் கைது தொடர்பாக, தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், ஜாய்மால்யா பாக்ஸி அமர்வு கூறுகையில், 'டிஜிட்டல் கைது விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். இதற்கு நாடு முழுதும் ஒரே மாதிரியான விசாரணை அவசியம். இந்த வழக்குகளை சி.பி.ஐ., விசாரிக்கலாம். எனினும், அனைத்து மாநிலங்களின் கருத்துகளை கேட்ட பின்னரே எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியும்' என்றது. அப்போது, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு உதவியுடன், ஏற்கனவே சில வழக்குகளை சி.பி.ஐ., விசாரித்து வருவதாக தெரிவித்தார். 'பொன்ஸி' போன்ற பெரும் நிதி மோசடி திட்டங்களில் சி.பி.ஐ., திணறியதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், நாடு முழுதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் நிர்வகிக்கும் திறனும், வளங்களும் சி.பி.ஐ.,க்கு உள்ளதா என்பதை மதிப்பிடும்படி அறிவுறுத்தினர். மேலும், இந்த மோசடி தொடர்பாக, இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த தகவல்களை வழங்கும்படி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நவ., மூன்றாவது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர். - டில்லி சிறப்பு நிருபர் -:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Premanathan S
அக் 28, 2025 12:11

யாரு விசாரிச்சாலும் கேசு முடிய 20 வருடம் ஆகும் தீர்ப்பு வர மேலும் குறைத்து ஆறுமாதம் அப்புறம் மேல் கோர்ட், சைடு கோர்ட், உச்ச கோர்ட் எப்படியும் தள்ளுபடி ஆகிவிடும் ஜெய் ஹிந்த் வந்தே மாதரம்


GMM
அக் 28, 2025 07:33

டிஜிட்டல் கைது. நாடு முழுவதும் ஒரே மாதிரி விசாரணை அவசியம் என்றால், சி.பி.ஐ. விசாரணை கட்டாயம். மாநில கருத்து அரசியல் காரணங்களில் மாறுபடும். உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்ற கருத்தை கேட்டு தீர்வு காண்பது இல்லை. CBI வழக்கில் திணறி இருக்கலாம் . நாடு முழுவதும் நிர்வகிக்கும் திறன், வளம் மாநில போலீசை விட அதிகம் இருக்கும். மத்திய விசாரணை அமைப்புகள் அரசியல் வக்கீல் வாதத்தில் முடக்கப்பட்டு வருகின்றன. நீதிமன்றம் அரசின் விசாரணை அமைப்பிற்கு இணங்க வேண்டும்.


சிட்டுக்குருவி
அக் 28, 2025 04:04

போன் கம்பெனிகள் இதை தடுக்க AI மூலம் வழியுள்ளதா என்று ஆராயிந்து சாப்ட்வேர் அப்டேட் செய்யவேண்டும் .எந்த ஒரு அமைப்பும் போனில் கைது செய்யும் வழியில்லை .அப்படி இருந்தும் மக்கள் எப்படி ஏமாறமுடியும் என்று தெரியவில்லை .ஒருவரை கைது செய்யவேண்டுமென்றால் அவரிடம் நேராக செல்லவேண்டும் என்பதுகூடவா மக்களுக்கு தெரியாது . ஒருவர்கூடவா நான் எந்த தப்பும்தசெய்யாதபோது ஏன் நம்மை கைது செய்யவேண்டும் என்று நினைக்கமாட்டார்கள் ஒருவேளை போன் கம்பெனிகள் சாப்ட்வேர் UPDATIL சிபிஐ ,போலீஸ், கைது போன்றாவார்த்தைகள் போனில் வந்தால் போன் ஆட்டோ ட்ராப் ஆகவேண்டும். .மேலும் பலவழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் வயதானவர்களாகவே இருக்கின்றார்கள் .அவர்கள் எல்லாம் வங்கிகளில் ஆன்லைன் ஒப்பரேஷனுக்கு பதிவு செய்திருப்பார்களா என்று தெரியவில்லை .யாராவது ஒருவர் ஆன்லைன் அக்சஸ் பதிவு செய்யாமலிருந்தால் அவர்கள் கணக்கில் பணம் அவர்களுக்கு தெரியாமல் ஆன்லைனில் மாற்றப்பட்டிருந்தால் அவர்கள் அதற்க்கு பொறுப்பாகமாட்டார்கள் .வங்கிகளோ பொறுப்பு .


சமீபத்திய செய்தி