உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒரு அமர்வு அளிக்கும் உத்தரவை மற்றொரு அமர்வு மாற்றுகிறது உச்ச நீதிமன்றம் வேதனை

ஒரு அமர்வு அளிக்கும் உத்தரவை மற்றொரு அமர்வு மாற்றுகிறது உச்ச நீதிமன்றம் வேதனை

புதுடில்லி, : 'ஒரு அமர்வு அளிக்கும் தீர்ப்பை, மற்றொரு அமர்வு மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது' என, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க, கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்திருந்தது. கவர்னர்களுக்கு அவ்வாறு காலக்கெடு விதிப்பது பொருத்தமற்றது என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் விளக்கம் அளித்தது. இந்நிலையில், தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வு வேதனை தெரிவித்துள்ளது. கொலை குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் ஒருவர், தன் ஜாமின் நிபந்தனைகளில் மாற்றம் செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, நீதிபதிகள் இதை தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் ஒரு அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் படுகிறது. அதே வழக்கை வேறு ஒரு அமர்வு விசாரித்து, ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மாற்றி எழுதுகிறது. இந்த போக்கு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட காலத்துக்கும், மேல்முறையீடு செய்த காலத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன. ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவர்களின் கோரிக்கையை ஏற்று, வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வோ அல்லது சிறப்பு அமர்வோ அமைக்கப்படுகின்றன. அப்போது தீர்ப்புகள் மாற்றி எழுதப் படுகின்றன. குறிப்பிட்ட சட்டப் பிரச்னையில் ஒரு அமர்வு அளிக்கும் தீர்ப்பு, சச்சரவுக்கு முடிவு காண்பதாக இருக்கும். அந்த தீர்ப்பை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். இது தான் அரசியல் சாசன சட்டப்பிரிவு 141ன் நோக்கம். ஆனால், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பின், அது தொடர்பான வழக்கை வேறு கண்ணோட்டத்தில் சீராய்வு செய்ய அனுமதித்தால், அது அரசியல் சாசன சட்டப்பிரிவு 141ன் நோக்கத்தை தோல்வியடைய செய்து விடுகிறது. மேலும், தீர்ப்புகள் மீதான மதிப்பையும் வலுவிழக்க செய்து விடுகிறது. முதலில் அளித்த தீர்ப்பை மறு விசாரணையின் போது மாற்றுவதன் மூலம், நீதி பரிபாலனம் சரியாக நிலைநாட்டப்பட்டு விட்டதாக அர்த்தமாகாது. இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 45 )

visu
நவ 28, 2025 17:07

கள்ளக்குறிச்சி பள்ளி எரிப்பு வழக்கு மாணவி தற்கொலை வழக்கு சாத்தான்குளம் வழக்கு எல்லாம் வருடக்கணக்கில் நடக்கின்றன இதே ஆந்திராவில் பல்மருத்துவர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு உடனடி தீர்ப்பு வழங்க சட்டம் இயற்றுது அதையும் மீறி குற்றவாளிகள் என்கவுண்டெர் செய்து முடிக்கிறார்கள் இங்க சாத்தான்குளம் வழக்கில் கொலை செய்தவர்கள் யார் என்று தெரிந்தும் வழக்கு நடந்து கொண்டே இருக்கு


அப்பாவி
நவ 28, 2025 15:16

அமர்வில் உள்ள ஆளுங்களின் mood க்கு ஏத்த மாதிரி தீர்ப்பு வரும். வீட்டில் சண்டை போட்டுட்டு தீர்ப்பெழுத வந்தால் தீர்ப்பு ஒரு மாதிரியாத்தான் இருக்கும். அவிங்க என்ன வேற்று கிரகத்திலிருந்து வந்து குதிச்சாங்களா?


Venkatesan Srinivasan
நவ 28, 2025 19:28

நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் எந்தவித அறம் சாரா வற்புறுத்தலுக்கும் உடன்படுவதில்லை என்று கொள்வோம். இந்தியா முழுமைக்கும் பொதுவாக ஒரே சட்ட புத்தகம். கீழமை நீதிமன்றங்களில் ஒரு வழக்கில் வாதி பிரதிவாதி தரப்பு வாதங்கள் அடிப்படையில் மட்டுமே தீர்ப்புகள் வருகிறது என்று கொண்டால் வழக்கறிஞர்கள் குறிப்பிட தவறிய - மறந்த சிலபல சட்ட கருத்துக்கள் நீதிபதிகள் பிரயோகிக்க வாய்ப்பு இருக்குமா? தெரியவில்லை. அப்படி இல்லாமல் இருந்தால் மேல் முறையீடுகளின் போது அத்தகைய சட்ட கருத்துக்கள் வழக்கில் குறிப்பிடும்போது மாறுபட்ட தீர்ப்புகள் வர வாய்ப்புள்ளது. இதே வழியில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் மாறுபட்ட அமர்வுகள் விசாரிக்கும் போது ஏற்படலாம். முழுமையான தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்தான் அமர்வுகளில் நீதிபதிகள் எண்ணிக்கை மாற்றம் செய்யப்படுகிறது. வழக்கு சார்ந்த சமர்பிக்கப்பட்ட வாதங்கள் தவிர்த்து ஏதும் வாதங்கள் விடுபட்டுள்ளதா என்று தனி நீதிபதிகள் குழு ஆராய்ந்து தீர்ப்புகள் வழங்கும் முன் பிரயோகம் செய்தால் மாறுபட்ட தீர்ப்புகள் வருவது குறையும்.


S SRINIVASAN
நவ 28, 2025 14:41

அரசியல்வாதிகளால் பதவிக்கு வரும் எவருமே நீதியை நிலைநாட்டுவது கடினமே.


பேசும் தமிழன்
நவ 28, 2025 14:09

உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது..... நீங்கள் அந்த தீர்ப்பை மாற்றி எழுதலாம்..... அதே இரண்டு நீதிபதிகள் அளித்த தீர்ப்பை.... மேல்முறையீடு செய்து 5 நீதிபதிகள் அமர்வு மாற்றினால்.... அது எப்படி தவறாகும் ???


SUBRAMANIAN P
நவ 28, 2025 14:03

இப்படிப்பட்ட உச்சநீதிமன்றத்தின் ஒரு கருத்தால் நீதிபதிகள் விலைபோய்விட்டனர் என்றுதான் அர்த்தம்.. இந்த பெருமை முழுவதும் நமது திராவிடமாடல் அரசு தரும் திமுகவுக்கே சேரும்.. எப்பேர்ப்பட்ட சாதனை.. உச்சநீதிமன்றத்தையே கவுத்து குழப்பம் விளைவிப்பதில் நம்மாளை யாரும் அடிச்சிக்கமுடியாது.


V Venkatachalam, Chennai-87
நவ 28, 2025 13:29

இவர்கள் வேதனை என்பது அரசியல் சாயம் பூசப்பட்டது போல தெரிகிறது. இவர் சொல்வது உச்ச நீதிமன்றத்தையும் உள்ளடக்கியதுதானே. அப்போ பூனைக்கு மணி கட்டுவது யார்? விடை கிடைக்காத வினா.


MUTHU
நவ 28, 2025 13:25

தன் பிள்ளை அதற்குள் இருந்தால் உணர்ச்சி வசப்படுவாரா. அப்போ செத்தவர் குடும்பத்திற்கு என்ன நீதி. விளங்கிடும்.


தமிழ் மைந்தன்
நவ 28, 2025 13:10

தற்போதைய ஊழல் திமுக அமைச்சர்களை விடுதலை செய்த நீதிபதுகள் போலவே இவரும் உள்ளார்


பெரிய குத்தூசி
நவ 28, 2025 12:49

முதலில் வழங்கப்பட்ட தீர்ப்பு பெட்டியின் அடிப்படையில் தவறாகவும் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக இருந்தால் என்னங்கையா செய்வது.


Modisha
நவ 28, 2025 12:46

உண்மைகளின் அடிப்படையில் அல்லாமல் வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையிலும் சார்பு சித்தாந்த அடிப்படையிலும் கொடுக்கப்படும் தீர்ப்புகள் நீதிபதிக்கு நீதிபதி முரண்படும்.


முக்கிய வீடியோ