காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி... நீடிக்குமா? தி.மு.க.,வுடன் ஏற்பட்ட விரிசலால் சிதறுகிறது?
-- நமது சிறப்பு நிருபர் --: தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் ஆட்சியமைக்க, தி.மு.க., கூட்டணியில் இருந்து விலகி காங்., ஆதரவு அளித்தது. இதனால், அக்கட்சி உடனான கூட்டணி முறிந்ததாக தி.மு.க., அறிவித்தது. இது, தேசிய அளவில் பா.ஜ.,வுக்கு எதிராக உருவாக்கப்பட்ட 'இண்டி' கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின், 'முதுகில் குத்தும்' என்ற அவப்பெயரும் காங்கிரசுக்கு கிடைத்துள்ளது. இதனால், தேசிய அரசியலில் இண்டி கூட்டணி நீடிக்குமா அல்லது சிதறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்தியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த, 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்., தலைமையில், 'இண்டி' கூட்டணி அமைக்கப்பட்டது. இதில், தி.மு.க., திரிணமுல் காங்., சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற பிராந்திய கட்சிகள் முக்கிய பங்கு வகித்தன. எனினும், தே.ஜ., கூட்டணியை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. முன்னதாக, இண்டி கூட்டணி அமைய முக்கிய காரணமாக இருந்தது தி.மு.க., 2004 முதல் காங்கிரசுடன் தேசிய மற்றும் மாநில அளவில் பெரும்பாலான தேர்தல்களில் இந்த இரு கட்சியினரும் ஒன்றாக போட்டியிட்டன. தி.மு.க., தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன், ராகுலை பிரதமர் வேட்பாளராக முதன்முதலில் அறிவித்தார். கடந்த 2024 லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இரு தலைவர்களுக்கும் இடையே நெருக்கமான உறவு வெளிப்பட்டது. பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல், ஸ்டாலினை, 'என் அண்ணன்' என அழைத்தார். ஆனால், த.வெ.க.,வுடன் காங்., கூட்டணி அமைத்த பின், தமிழகத்தில் அரசியல் களம் முற்றிலும் மாறுபட்டுள்ளது. கடந்த 2023 ஜூலை 18ல், கர்நாடகாவின் பெங்களூரில், 26 எதிர்க்கட்சிகளால் உருவாக்கப்பட்ட இண்டி கூட்டணியில் விரிசல் ஏற்படுவது இது முதன்முறை அல்ல. கூட்டணியை ஒன்றிணைக்கும் சக்தியாக இருந்த காங்கிரஸ், துவக்கம் முதலே ஒவ்வொரு பிராந்திய கட்சிகளுடனும் பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில், காங்., - -இடதுசாரி உறவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள சித்தாந்த ரீதியான முரண்பாடுகள் தேசியளவில், இண்டி கூட்டணியின் ஒற்றுமையை தடுக்கின்றன. சமீபத்திய தேர்தலில், கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசு, காங்கிரசால் தோற்கடிக்கப்பட்டதால், இரு தரப்பும் எப்படி முன்னேறும் அல்லது பிரிந்து செல்லும் என்பதை அரசியல் வல்லுனர்கள் கூர்ந்து கவனிக்கின்றனர். இதே போல், உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடனும் காங்., உறவு சுமுகமாக இல்லை. இரு கட்சிகளும் இண்டி கூட்டணியில் இருந்த போதும், தேர்தலின் போது தொகுதி பங்கீடு, அரசியல் முரண்பாடு உள்ளிட்ட பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றன. சமீபத்தில், தி.மு.க.,வுடன் கூட்டணியை முறித்த காங்கிரசின் அணுகுமுறைக்கும் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிருப்தி வெளிப்படுத்தி உள்ளார். கடந்த 2025ல், பீஹார் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும், காங்கிரசை ஒரு சுமையாகவே பார்க்கிறது. மஹாராஷ்டிராவில், சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்., இண்டி கூட்டணி செயல்பாடுகளில் இருந்து சற்று விலகியே உள்ளது. நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., கட்சி காங்கிரசை ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அது, எப்போதும் புற முதுகில் குத்தும் கூட்டாளி என, மம்தா விமர்சித்து வருகிறார். இதேபோல், இண்டி கூட்டணியில் இருந்து, 2025ல் ஆம் ஆத்மியும் வெளியேறியது. ஒவ்வொரு மாநில அளவிலும் ஏற்படும் போட்டி மற்றும் உரசல்களால், பா.ஜ.,வுக்கு எதிரான ஒற்றுமையான முன்னணியை இண்டி கூட்டணி உருவாக்க முடியவில்லை. 2024 லோக்சபா தேர்தலுக்கு பின், தேசிய அரசியலில் காங்கிரசின் தாக்கம் குறைந்துள்ளது. தி.மு.க., - காங்., இடையே கூட்டணி முறிவு, தேசிய அரசியலில் இண்டி கூட்டணியின் வலிமையை பெரிதும் பாதித்துள்ளது.