11ம் ஐந்தாண்டுத் திட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த பல்கலை.கள்!
இந்த ஐந்தாண்டுத் திட்டத்தில் உலகத்தரம் வாய்ந்த 14 புதிய பல்கலைக்கழகங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கான முதல்கட்ட திட்டவரைவை யு.ஜி.சி.,யின் நிபுணர்குழு தயாரித்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி.,யின் நிபுணர்குழு இதற்காக புகழ்பெற்ற கல்வியாளர்கள், அறிஞர்கள், மற்றும் திட்டங்களை உருவாக்கும் நிபுணர்களுடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான திட்ட வரைவில் ‘நேஷனல் நாலெட்ஜ் கமிஷன்’ (இஓஇ) வழங்கிய பரிந்துரைகளும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. இந்தியாவின் 14 மையங்களில் இப்பல்கலைக்கழகங்களை நிறுவ முடிவு செய்யப்பட்டு, பின்வரும் இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆந்திராவில் விசாகபட்டினம், அசாமில் கவுஹாத்தி, பீகாரில் பாட்னா, கர்நாடகாவில் மைசூரு, கேரளாவில் கொச்சி, மத்திய பிரதேசத்தில் போபால், மகாராஷ்டிராவில் புனே, ஒரிசாவில் புவனேஸ்வர், பஞ்சாபில் அமிர்தசரஸ், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், தமிழகத்தில் கோவை, உத்தரபிரதேசத்தில் கிரேட்டர் நொய்டா, மேற்கு வங்கத்தில் கோல்கட்டா ஆகியவையே இந்த மையங்கள். இந்தியாவின் 30 மையங்களில் சர்வதேச தரம் வாய்ந்த மத்திய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும் என்று ஏற்கனவே பாரதப்பிரதமர் 2007ல் அறிவித்திருந்தார். புதியதாக நிறுவப்படவுள்ள இந்தப் பல்கலைக்கழகங்கள் நாடு முழுமையும் தரம்வாய்ந்த படிப்புகளைத் தருவதில் முத்திரை பதிக்கும் என்றும், சர்வதேசத் தரத்துடன் உலகின் முக்கிய பல்கலைக்கழகங்களுள் ஒன்றாக திகழும் என்றும் பாரதப்பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.