வீரர்களை உருவாக்க ஆசிரியர்களுக்கு டார்கெட் சாதனை; கனவு நனவாகும்; தமிழகம் இன்னும் தலை நிமிரும்
கோவை: ஆண்டுக்கு இவ்வளவு வீரர்களை உருவாக்க வேண்டுமென, உடற்கல்வி ஆசிரியர்களுக்கு டார்கெட் விதிக்க வேண்டும்; அவ்வாறு விதித்தால் விளையாட்டில், தமிழகம் இன்னும் சாதிக்கும் என ஓய்வு பெற்ற விளையாட்டு பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.அவர்கள் கூறியதாவது:கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும், 1,387 பள்ளிகள், 660க்கும் மேற்பட்ட தனியார், 148 மாநகராட்சி பள்ளிகள், 100க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. தனியார் பள்ளிகள், கல்லுாரிகளில் பெரும்பாலும் விளையாட்டுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் உள்ளன.தற்போது, தனியாருக்கு நிகராக நவீன ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அரசுப் பள்ளி, கல்லுாரிகளில் ஏற்படுத்தப்படுகின்றன.கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவம் போல், விளையாட்டுக்கு வழிகாட்டுதல்கள், கட்டமைப்பு வசதிகள் போதியளவில் இல்லாதது ஏழை வீரர், வீராங்கனைகளின் விளையாட்டு கனவை கேள்விக்குறியாக்குகிறது.விளையாட்டு ஆர்வலர்கள், முன்னாள் பயிற்சியாளர்கள் கூறியதாவது:மாணவர்கள் மாவட்டம், மாநிலம், பல்கலை அளவில், தேசிய, சர்வதேச அளவில் என விளையாட்டில் உயர்ந்த நிலைக்கு சென்றால், அவர்களது வாழ்க்கையே மாறிவிடும்.தனியார் பள்ளி, கல்லுாரிகளில் தனியாக பயிற்சியாளர்களை நியமிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளி, கல்லுாரிகளில் கபடி, கால்பந்து, கோ-கோ தவிர மற்ற போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை.அங்கு பயிலும் மாணவர்கள், உயர்ந்த நிலைக்கு செல்ல, மாலை நேரங்களில் ஆசிரியர்கள் கட்டாயம் பயிற்சி அளிக்க வேண்டும். ஆண்டுக்கு இவ்வளவு மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற, டார்கெட் வழங்கினால், விளையாட்டு துறை இன்னும் சிறக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நிதி ஒதுக்கணும்!அரசு பள்ளி மாணவர்கள் ஷூக்கள், சீருடை இல்லாமல் போட்டியில் பங்கேற்பதை காண முடிகிறது. சிறந்த வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கவும், அரசு தனி நிதி ஒதுக்குவதுடன், விளையாட்டு மைதானம், ஆசிரியர் பற்றாக்குறை போன்ற குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்கின்றனர், உடற்கல்வி ஆசிரியர்கள்.