பத்திரிகையாளர்கள் பெயரில் பணம் வாங்கியோர் மீது சட்ட நடவடிக்கை: கோவை பிரஸ் கிளப் வலியுறுத்தல்
கோவை: பத்திரிகையாளர்கள் பெயரில் சிலர் பணம் வாங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போலீசாருக்கு கோவை பிரஸ் கிளப் வலியுறுத்தியுள்ளது.கோயமுத்துார் பத்திரிகையாளர் மன்றம் (கோயமுத்துார் பிரஸ் கிளப்) வெளியிட்டுள்ள அறிக்கை:கோவையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பெண்களை வைத்து, விபச்சார தொழில் செய்த இரண்டு பேரை மாநகர போலீசார் கைது செய்திருக்கின்றனர். குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையில், பத்திரிகையாளர்கள் என்ற பெயரில், பெரிய தொகை மாதந்தோறும் பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஊடகத்தில் பணிபுரிவோர் பெயர்கள் மற்றும் அவர்கள் பணம் வாங்கியதற்கான, ஜிபே விபரங்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. ஒன்பது ஊடகவியலாளர்களுக்கு, பணம் அனுப்பியுள்ளதாக உளவுத்துறை, மேலிடத்துக்கு தகவல் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.இவ்விவகாரம், ஊடகத்துறையில் இருப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த பத்திரிகையாளர்கள் யாரிடம் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்ற விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.தவறு செய்தவர்கள் தங்களை யாரும் எதுவும் செய்யவில்லை என்ற நினைப்பில், மேலும் தவறு செய்ய வாய்ப்பு இருக்கிறது. எனவே, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் முன்வர வேண்டும்.சிலரின் ஒழுங்கீனமான செயல்பாட்டால், கோவை பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரை போக்கும் வகையில், கடும் நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கிறோம்.பல்வேறு அரசு துறைகளில் பத்திரிகையாளர் என சொல்லி, சிலர் அவ்வப்போது பணம் பெறுவது வெளிப்படையாக நடக்கிறது. இதுபோன்ற நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பணம் கேட்டு வரும் பத்திரிகையாளர்கள் மீது, உரிய ஆதாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பணம் கொடுக்கும் அரசு துறை அதிகாரிகளின் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.செய்தியை வெளியிடுவதற்கும், வெளியிடாமல் இருப்பதற்கும், தவறுகளை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும், குற்றங்களுக்கு துணை போவதற்கும் லஞ்சமாக பணம் பெறுவது அவமானம்.லஞ்சம் பெறும் பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க, நேர்மையாக, உண்மையாக பணியாற்றும் அனைவரும், உறுதுணையாக இருக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.