மார்க்கெட் கமிட்டிகளில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க... கோரிக்கை! இ-நாம் திட்டப்பணிகளை மேற்கொள்வதில் தொய்வு
விழுப்புரம் மாவட்ட மார்க்கெட் கமிட்டிகளில் குறைவான பணியாளர்கள் உள்ளதால், 'இ-நாம்' திட்டத்தில் பணிகளை மேற்கொள்ளவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை 'இ-நாம்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், விவசாயிகளின் விளைபொருட்கள் ஏலம் எடுக்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் நியாயமான விலை பெறுவதோடு, வியாபாரிகளும் எளிதாக பொருட்களை வாங்க முடிகிறது.இத்திட்டத்தில் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்தவுடன், மார்கெட் கமிட்டி மெய்நிகர் வங்கி கணக்கு மூலம் பணம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், அவலுார்பேட்டை, விக்கிரவாண்டி, அரகண்டநல்லுார் ஆகிய மார்க்கெட் கமிட்டிகளிலும் நடைமுறையில் உள்ளது.இந்த மார்க்கெட் கமிட்டிகளுக்கு சீசன் நேரங்களில் நெல், வேர்க்கடலை, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.இந்நிலையில், இ-நாம் திட்டத்தில் பணிகளை மேற்கொள்ள ஒரு மார்க்கெட் கமிட்டிக்கு தற்காலிக பணியாளர்கள் என தலா 5 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.இப்பணியாளர்கள், கமிட்டிக்கு வரும் மூட்டைகளின் கேட் என்ட்ரி; மூட்டைகள் வரத்து; லாட் போடுவது; மின்னணு ஏலம் தொடர்பாக பட்டியல் ஒட்டுவது; விற்பனை பில் எடுத்து விவசாயிகளுக்கு வழங்குவது, மற்றும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட வங்கி கணக்கு, ஆதார் கார்டு விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது; விவசாயிகள் விற்பனை செய்த பொருட்களுக்கான பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்துவது, உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில், கடந்த ஜன., 1ம் தேதி முதல், தற்காலிக பணியாளர்கள் ஒருவர் மட்டுமே பணிபுரிய வேண்டும் எனவும், மீதமுள்ளவர்களை பணிக்கு வர வேண்டாம் என வேளாண் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 'இ-நாம்' திட்ட மார்க்கெட் கமிட்டிகளில் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளாார். 4 பேர் செய்த வேலையை தற்போது ஒருவர் செய்வதால், விற்பனை பில் வழங்குவது உள்ளிட்ட இ-நாம் திட்டத்தில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது.இதனால், உரிய நேரத்தில் பில் வழங்காததை கண்டித்து விழுப்புரம், அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டிகளில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், மற்ற மார்க்கெட் கமிட்டிகளில் அதிகாரிகளிடையே, விவசாயிகள் தினந்தோறும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நெல், உளுந்து அறுவடை சீசன் என்பதால் குறைவான பணியாளரை வைத்துக் கொண்டு ஆன்லைன் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மார்க்கெட் கமிட்டி அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.எனவே, மார்க்கெட் கமிட்டிகளில் போதுமான பணியாளர்களை நியமனம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.