இல்லம் தேடி கல்வி திட்டத்தின் பெயரில் அரங்கேறும் மோசடி; பள்ளி மாணவர்கள் குறி வைப்பு!
சென்னை: பள்ளி மாணவர்களை குறிவைத்து, 'இல்லம் தேடி கல்வி திட்டம்' பெயரில் போலி அடையாள அட்டைகள் தயாரித்து, பணம் பறிக்கும் செயலில் மோசடி கும்பல் ஈடுபட்டு உள்ளது.கொரோனா பெருந்தொற்று காலத்தில், மாணவர்கள் இடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை சரி செய்யும் நோக்கில், 'இல்லம் தேடி கல்வி' என்ற சிறப்பு திட்டத்தை, தமிழக பள்ளிக் கல்வித்துறை தொடங்கியது.இத்திட்டத்தின் கீழ், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தன்னார்வலர்கள் உதவியுடன், தினசரி மாலை வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இத்திட்டம் தொடங்கியது முதல், இதன் பெயரில், பல்வேறு மோசடிகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன.தற்போது, 'இல்லம் தேடி கல்வி திட்டம்' பெயரை பயன்படுத்தி, 10 மற்றும் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி, பணம் பறிக்கும் முயற்சியில், சைபர் குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளனர்.பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களை, மொபைல் போன் மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக தொடர்பு கொள்ளும் மோசடி கும்பல், 'அரசு கல்வி உதவித்தொகை, சிறப்பு நிதியுதவி, மாணவர் நலத்தொகை' போன்ற பெயர்களில், 40,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெற, நீங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளீர்கள்' என, ஆசை வார்த்தை கூறி, பணம் பறிக்கின்றனர்.பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளை போல் பேசி, மாணவர்களை நம்ப வைக்க, போலி அடையாள அட்டை, போலி அரசு ஆவணங்களை, அவர்களின் 'வாட்ஸாப்' எண்ணுக்கு அனுப்பி, உதவித்தொகை பெற, பதிவு மற்றும் செயலாக்க கட்டணமாக, 5,000 ரூபாய் அனுப்புங்கள் எனக் கூறி, பணம் பறிக்கின்றனர் என, பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.இது போன்ற மோசடியில் ஈடுபடுவோர் மீது, போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.