அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பு இடஒதுக்கீடு தட்டி பறிப்பு தடுக்க சீமான் கோரிக்கை
சென்னை: அரசு மருத்துவர்களின் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான 50% இடஒதுக்கீடு தட்டிப் பறிக்கப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவரது அறிக்கை:தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, மத்திய அரசால் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, 2017ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது.2018ம் ஆண்டு தமிழக மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப் போராட்டத்தின் விளைவாக, 2020ம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது.2025 கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில் 151 இடங்கள் காலியாக உள்ள நிலையில், அவற்றை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற உச்சநீதிமன்றம் 2026ம் ஆண்டு மே 29ம் தேதி அன்று உத்தரவிட்டுள்ளது. இதனால் தமிழக அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டுள்ளது.மேலும், சில ஆண்டுகளாக 'நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழகத்தில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், மத்திய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிப்பதென்பது மாநில உரிமையை பறிக்கும் அப்பட்டமான சூழ்ச்சியாகும்.உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழகத்தின் பொது சுகாதார கட்டமைப்பையும், ஏழை மக்கள் அரசு மருத்துவமனைகளில் உயர் மருத்துவம் பெறும் உரிமையையும் நேரடியாக பாதிக்கும். மேகதாது அணை போல, அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயிலும் விவகாரத்திலும் த.வெ.க., அரசு மெத்தனமாக இருப்பது தமிழகத்தின் உரிமையை தாரைவார்க்கும் சிறிதும் பொறுப்பற்றச் செயலாகும்.எனவே அரசு மருத்துவர்கள் உயர் மருத்துவம் பயில, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்படும் 50% இடஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழக அரசு உடனடியாக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.