உள்ளூர் செய்திகள்

அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவு வெளியாகும் முன்பே பலர் தேர்வு; அமலாக்கத்துறை தகவல்

சென்னை: 'நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக, சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024 - 25ம் ஆண்டுகளில், 2,538 பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்பட்டது.பணி நியமனங்களுக்கு, 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி, அமலாக்கத் துறை, தமிழக டி.ஜி.பி.,க்கு கடிதம் அனுப்பியது.அதன்படி, தமிழக டி.ஜி.பி., வழக்குப்பதிவு செய்யக் கோரி, மதுரையை சேர்ந்த ஆதிநாராயணன், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய கோரி, அ.தி.மு.க., எம்.பி., இன்பதுரை ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், தனித்தனியே மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.அப்போது அமலாக்கத்துறை தரப்பில், சிறப்பு பிளீடர் என்.ரமேஷ் ஆஜராகி, “அதிகாரிகள் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே, பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக, அவர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. பெருந்தொகை பெறப்பட்டு உள்ளதற்கு, 'வாட்ஸாப்' ஆதாரங்கள் உள்ளன,” என்றார்.அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், “அமலாக்கத் துறை கடிதத்தின்படி, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த, அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வழக்கு தாக்கல் செய்யப்படும் முன்பே, அமலாக்க துறை கடிதம் அடிப்படையில், அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, கோர முடியாது,” என்றார்.லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “லஞ்ச ஒழிப்புத் துறை விதிகளில், புகார்கள் மீது ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணை முடிந்ததும், உரிய அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்,” என்றார்.அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், வழக்கின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்