சாதனை மகளிருக்கு அவ்வையார் விருது ; விண்ணப்பிக்க சமூகநலத்துறை அழைப்பு
கோவை: பெண்களின் முன்னேற்றத்துக்கு சிறந்த சேவை புரிந்தவர்கள், அடுத்த ஆண்டு உலக மகளிர் தினவிழாவின் போது, அவ்வையார் விருது வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர்.இது குறித்து, கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:அடுத்த ஆண்டு உலக மகளிர் தினவிழா நடைபெறும், மார்ச் 8ல் சிறந்த சேவை புரிந்த மகளிருக்கு அவ்வையார் விருது வழங்கி, கவுரவிக்க உள்ளோம். இதற்கான விண்ணப்பங்களை, மாவட்ட நிர்வாகம் வரவேற்கிறது.விண்ணப்பதாரர், தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம். குறைந்தபட்சம், 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொண்டிருக்க வேண்டும்.பெண் குலத்துக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்றவற்றில், அதிக நாட்டம் பெற்றிருக்க வேண்டும். இவ்விருதுக்கான விண்ணப்ப விபரங்களை, தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் (https://awards.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம்.இவ்விருது பெற விரும்புவோர் குறித்த சுயவிபரத்தை ஒரு பக்கத்துக்கும், தேசிய மற்றும் உலகளவில் பெற்ற விருதுகளின் விபரத்தை குறிப்பிட வேண்டும். கையேட்டில், விருது பெற்ற போட்டோ மற்றும் சான்றிதழ் இணைக்க வேண்டும்.விண்ணப்பங்களை, மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், பழைய கட்டடம் (தரைதளம், அறை எண்:5), கலெக்டர் அலுவலகம், கோவை என்ற முகவரிக்கு அனைத்து சான்று விபரங்களுடன், உரிய படிவத்தில் பூர்த்தி செய்து, ஜன.,4க்குள் அனுப்ப வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.