அடிப்படை கல்வியே அஸ்திவாரம்; அரசு உணர்வது எப்போது? கேள்வி எழுப்பும் ஆசிரியர்கள்
திருப்பூர்: 'உயர்கல்வியில் மாணவ, மாணவியர் கரை சேர, ஆரம்பக் கல்வியே அடிப்படை; அக்கல்வி போதிக்கும் ஆசிரியர்களின் தகுதியை மதித்து ஊதியம் வழங்க அரசு தயங்குவது ஏற்புடையதல்ல' என, இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தினர் கூறினர்.'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, இடைநிலை ஆசிரியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்ட அளவில், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில், காலை முதல் மாலை வரை ஸ்டிரைக்கில் ஈடுபடுகின்றனர்.ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை வாக்குறுதியை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பேரணியாக சென்றனர். 2009ம் ஆண்டு ஜூன் 1ம் தேதிக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, ஊதியம் குறைக்கப்பட்டது.'மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடு களையப்படும்' என, அப்போதைய முதல்வர் கருணாநிதி கூறினார்; ஆனால், நிறைவேற்றவில்லை.தொடர்ந்து, கடந்த தேர்தலில், தி.மு.க.வும் தனது தேர்தல் அறிக்கையில், இந்த வாக்குறுதியை அறிவித்திருந்தது.ஆட்சிக்கு வந்து, 4 ஆண்டு கடந்த நிலையிலும், அறிவிப்பை அமல்படுத்த முதல்வர் தயங்குகிறார். ஊதிய பிரச்னையை களைவதற்கு அமைக்கப்பட்ட குழுவும் என்னவானது என தெரியவில்லை.மாணவ, மாணவியருக்கு ஆரம்பக்கல்வி தான் அடிப்படை; முதல் வகுப்பில் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் ஒழுக்கம், தன்னம்பிக்கை தான் அவர்களின் உயர்கல்வி வரையும், அதையும் தாண்டி அவர்களின் வாழ்க்கைக்கும் அது பயனளிக்கிறது.அந்த அடிப்படையில் தகுதி தேர்வு முடித்த தரமான ஆசிரியர்கள் தான் ஆரம்பக்கல்வியில், மாணவ, மாணவியரை உருவாக்குகின்றனர்.ஆனால், 'சம வேலை, சம ஊதியம்' மறுக்கப்படுவது, ஏற்புடையதல்ல. தகுதியான ஆசிரியர்களுக்கு தகுதியான ஊதியம் வழங்குவது கல்விக்கு வழங்கப்படும் மரியாதை என்பது, உணரப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.