சங்க கால சேர மன்னன் பெயர் பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு
மத்திய தொல்லியல் துறையின் அகழாய்வில், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சங்க கால சேர மன்னரின் பெயர் பொறித்த பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது .திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளிக்கு அருகில் உள்ள, குமரிக்கல்பாளையம் என்ற ஊரில், மத்திய தொல்லியல் துறை சார்பில், அகழாய்வுப் பணி நடக்கிறது. இரும்பு காலம் துவங்கி, சங்க காலம் வரையிலான மனிதர்கள் வாழ்ந்த பகுதி, தற்போது விவசாய நிலமாக, தனியார் வசம் உள்ளது.தற்போது இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில், இரும்பு காலம், சங்க காலத்தைச் சேர்ந்த கருப்பு, சிவப்பு மண்பாண்ட ஓடுகள், காவி மற்றும் வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்டுள்ள ஓடுகள் உள்ளிட்டவையும் நிறைய கிடைத்துள்ளன.முக்கியமாக ஒரு மண்பாண்ட சேமிப்பு கலத்தின் உடைந்த கழுத்துப்பகுதி கிடைத்துள்ளது. அதில், 'இரும்புறை' என்ற பெயர் பொறிக்கப்பட்டுள்ளது .இது, தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துருவில் உள்ளது. இதே எழுத்துருவில் 'ப, ந' போன்ற ஓரெழுத்துள்ள மண்பாண்ட ஓடுகளும், அதிகளவில் கிடைத்துள்ளன.இது குறித்து, மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அறவாழி கூறுகையில், “கிடைத்துள்ள பானை ஓடுகள், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, சங்க காலத்தை சேர்ந்தவை.சங்க கால சேரர்கள், இரும்புறை அல்லது இரும்பொறை என்ற குடிப்பெயருடன் அழைக்கப்பட்டுள்ளனர். அகழாய்வு தொடர்ந்து நடக்கிறது,” என்றார்.