வள்ளுவத்தை வாசித்தால் வாழ்வு மேம்படும்: வழிகாட்டிய தமிழ் சங்க இலக்கிய விழா
கோவில்பாளையம்: 'வள்ளுவத்தை வாசித்தால் வாழ்க்கை மேம்படும்' என, இலக்கிய விழாவில் தெரிவிக்கப்பட்டது.கோவில்பாளையம், விவேகானந்தா மேலாண்மை கல்லுாரியில், கவையன்புத்துார் தமிழ்ச் சங்க இலக்கிய நிகழ்வு நடந்தது. பொதுச்செயலாளர் கணேசன் வரவேற்றார்.டாக்டர் கண்ணன் தலைமை வகித்து பேசுகையில், “ஒவ்வொரு நாளையும், சிறப்பு வாய்ந்த நாளாக கருதி விழித்தெழுபவரே, வீறுநடை போட முடியும். வள்ளுவரின் குறள் படி வாழ்ந்தால், வையகம் நம்மை வாழ்த்தும்,” என்றார்.அரியலுார் நல்வழி பயிற்சி மையத் தலைவர் பழனிசாமி பேசுகையில், “இயற்கையை நேசித்து வாழ்பவர் தமிழன்,” என்றார்.'அறிவோம் ஒரு அரிய செய்தி' என்ற தலைப்பில், மாணவி ரோகிணி, 'படித்ததில் பிடித்தது' எனும் தலைப்பில் தீக்சித் ஆகியோர் பேசினர். நான்கு வேதங்களின் சிறப்பு குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டது.'விழுப்புண் படாத நாள் எல்லாம்' எனும் தலைப்பில் டாக்டர் சுப்பிரமணியம் பேசுகையில், “வாழ்வையும் உறுதியையும் வெளிப்படுத்துவது தமிழ் இலக்கியங்களே. கம்பனை படித்தால் அனைத்து நலன்களையும் வளங்களையும் பெறலாம். வள்ளுவத்தை வாசித்தால் வாழ்க்கை மேம்படும். சிலப்பதிகாரம் படித்தால் சிக்கல் தீரும். பாரதியை படித்தால் பண்போடு கூடிய வீரம் பிறக்கும்,” என்றார்.பெரியபுராண நாயன்மார்களை நினைவு கூரும் கருத்தரங்கில், முனைவர் முகமது ஆரிப் தலைமை வகித்து பேசுகையில், “நாயன்மார்களின் வாழ்க்கை நமக்கு பல்வேறு போதனைகளை தருகிறது. நாம் பின்பற்ற வேண்டியவற்றை எடுத்துரைக்கிறது,” என்றார்.டாக்டர். கவிதா விஜயகுமார், துரைசாமி, அசோக்குமார், மனோஜ், கைலாஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சான்றோர்கள் கவுரவிக்கப்பட்டனர். சண்முக பிரியா, பானுமதி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.