ஆபாச வலையில் சிக்கும் மாணவ, மாணவியர்: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
கோவை: 22 வயதான அந்த மாணவர், கோவை தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். இவருடன், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான பெண், பின்னர் வாட்ஸ்அப் எண்ணை பகிர்ந்து நெருக்கமாக பேசி வந்துள்ளார்.நட்பாக தொடங்கிய உரையாடல், பின்னர் ஆபாசமாக மாறியுள்ளது. வீடியோ கால் மூலம் மாணவனை ஆடையின்றி பேச துாண்டியுள்ளனர்.அந்த காட்சிகளை பதிவு செய்து, அதை வெளியிடுவதாக மிரட்டி முதலில் ரூ.20 ஆயிரம் பறித்ததுடன், தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இதனால் பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தவித்துள்ளார் மாணவன். மாணவனின் பெற்றோர் எண்ணை பெற்ற கும்பல், அவர்களுக்கும் வீடியோ அனுப்பி மிரட்டியுள்ளனர்.வேறு வழியின்றி பணம் வழங்க பெற்றோர் தயார் ஆயினர். நல்ல வேளை, நண்பர் ஒருவர் அறிவுரை வழங்கி, சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.கோவையில் நடந்த இது போன்ற ஆபாச சைபர் மிரட்டல் மோசடிகள் சமீபகாலமாக இந்தியா முழுவதும் அதிகரித்து வருகின்றன.இளைஞர்களை சிக்கவைத்து, வீடியோ காட்சிகளை பதிவு செய்து பணம் பறிக்கும் கும்பல் பற்றி, இளம் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கிறார், கோவை சைபர் கிரைம் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா லட்சுமி.“தற்போதைய டிஜிட்டல் காலத்தில், அறிமுகமில்லாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் பகிர்வது, வீடியோ கால் மூலம் ஆபாசமாக நடந்து கொள்வது போன்றவை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.வீடியோ, ஆடியோ, புகைப்படம் எதுவாக இருந்தாலும் பதிவு ஆகாது என்ற தவறான நம்பிக்கை உள்ளது. தெரிந்த நபர்களாகவே இருந்தாலும் இது போன்ற அந்தரங்க விஷயங்களை பகிரக்கூடாது,” என்கிறார் அவர்.மேலும் அவர், “ஆண்கள், முன்பின் அறிமுகம் இல்லாத மோசடி கும்பல்களிடமும், பெண்கள் அதிகம் தெரிந்த நபர்கள் அதாவது காதலன், நண்பன் போன்றவர்களுக்கும் படங்கள், வீடியோக்களை பகிர்ந்து மாட்டிக்கொள்கின்றனர்.பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து தவறான காட்சிகளாக உருவாக்கி மிரட்டுதல், தனிப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி பணம் கேட்டல் போன்ற புகார்களையும் சைபர் பிரிவில் காண்கிறோம்.சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம். இது போன்ற சூழ்நிலைகளில் பயந்து பணம் கொடுப்பது பிரச்னையை தீவிரப்படுத்தும் என்பதால், உடனடியாக புகார் அளிக்க முன்வர வேண்டும். ரகசியம் பாதுகாக்கப்படும்,” என தெரிவித்தார்.ஆண்கள், முன்பின் அறிமுகம் இல்லாத மோசடி கும்பல்களிடமும், பெண்கள் அதிகம் தெரிந்த நபர்கள் அதாவது காதலன், நண்பன் போன்றவர்களுக்கும் படங்கள், வீடியோக்களை பகிர்ந்து மாட்டிக்கொள்கின்றனர்.சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம். பயந்து பணம் கொடுப்பது பிரச்னையை தீவிரப்படுத்தும் என்பதால், உடனடியாக போலீசில் புகார் அளிக்க முன்வர வேண்டும். ரகசியம் பாதுகாக்கப்படும்.