அமெரிக்காவை நோக்கி வந்த ராட்சத விண்கல்: வளிமண்டலத்தில் வெடித்ததால் தப்பிய நகரங்கள்
வாஷிங்டன்: வடகிழக்கு அமெரிக்காவின் வான்பரப்பில் நுழைந்த பிரமாண்ட விண்கல் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், ஏற்பட்ட அதிர்வுகளால், வீடுகள் குலுங்கியதால், நிலநடுக்கம் ஏற்பட்டதோ என அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான மாசசூசெட்ஸ் பகுதியில் நேற்று முன்தினம் மதியம் அரிய வானியல் நிகழ்வு நடந்தது. விண்ணில் இருந்து வந்த ராட்சத விண்கல் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்த போது ஏற்பட்ட உராய்வு காரணமாக, பகல் நேரத்திலேயே வானில் பிரகாசமான நெருப்பு பந்து தோன்றி மறைந்தது. அதைத் தொடர்ந்து சில நொடிகளில் பீரங்கி வெடிப்பது போன்ற பயங்கர வெடி சத்தம் கேட்டது.பாஸ்டன், கேப் காட், நியூ ஹாம்ப்ஷயர் மற்றும் ரோட் தீவு உள்ளிட்ட பல பகுதிகளில் பயங்கர சத்தத்துடன், நில அதிர்வு போன்ற உணர்வும் ஏற்பட்டதால், அப்பகுதியில் வசித்த பொதுமக்கள் அச்சமடைந்தனர்.இது குறித்து நாசா மற்றும் அமெரிக்க விண்கல் சங்கம் கூறியிருப்பதாவது:அமெரிக்க வான்பரப்பில் வெடித்தது மூன்று அடி அகலமும், கணிசமான எடையும் கொண்ட ஒரு விண்வெளிப் பாறையாகும். இது மணிக்கு 1.20 லட்சம் கிலோ மீட்டர் என்ற கற்பனைக்கு எட்டாத அதீத வேகத்தில் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது. பூமியின் மேற்பரப்பில் இருந்து 64 கி.மீ., உயரத்தில், கடுமையான காற்று உராய்வைத் தாங்க முடியாமல் அது வெடித்து சிதறியது.இந்த வெடிப்பின் போது வெளியான ஆற்றலானது, 300 டன், 'டி.என்.டி.,' வெடிப்பொருட்களை ஒன்றாக வைத்து வெடிப்பதற்கு சமமானதாக இருந்தது.இவ்வாறு தெரிவித்துள்ளன.அமெரிக்காவின் அதிநவீன கோஸ் - 19, செயற்கைகோள், பாஸ்டன் நகரின் தெற்கு கடற்கரை பகுதிக்கு மேலே வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு பிரமாண்ட ஒளிர்தலை தன் கேமராவில் பதிவு செய்ததன் வாயிலாகவே விஞ்ஞானிகள் விண்கல் வெடித்ததை உறுதி செய்தனர்.விண்கல் பூமியின் மிக உயர்ந்த வளிமண்டலத்திலேயே வெடித்து சிதறிவிட்டதால், தரையில் இருந்த மனிதர்களுக்கோ, கட்டடங்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என உள்ளூர் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். வளிமண்டலத்திலேயே விண்கல்லின் துண்டுகள் பெரும்பாலும் சாம்பாலாகியிருக்கும் என்பதால், அவை பூமியில் கிடைப்பது மிக கடினம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை அதன் சிறிய எஞ்சிய பாகங்கள் தப்பியிருந்தாலும் கூட, அது மாசசூசெட்ஸ் கடற்கரையைத் தாண்டி அட்லாண்டிக் பெருங்கடலில் தான் விழுந்திருக்க வேண்டும் என தெரிவித்தனர்.