அரசு பள்ளிகளின் வேலை நேரம் மாற்றியமைப்பு?: போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் என்பது தீர்க்க முடியாத பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த நேரங்களில் ஒரு கி.மீ., துாரத்தை கடப்பதற்கு, 15 நிமிடங்களுக்கு மேலாகிறது. இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கோரிக்கை பெங்களூரில் உள்ள அரசு பள்ளிகள் காலை 10:30 மணி முதல், மாலை 4:30 மணி வரை இயங்குகின்றன. காலை நேரத்தில் அன்றாட பணிக்கு செல்வோர் வாகனங்களில் செல்வதால், போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கும்.இதனால், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடிவதில்லை. இதை கருதி, அரசு பள்ளியின் வேலை நேரத்தை மாற்றியமைப்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை, பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்துள்ளது. இது குறித்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:பெங்களூரில் உள்ள அரசு பள்ளிகளில் போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள், ஆசிரியர்கள் தாமதமாக வருவதால், பணிநேரத்தை மாற்றியமைக்கும்படி கோரிக்கை வைத்து உள்ளனர்.இந்த கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. இந்த விஷயத்தில் கல்வித்துறை அதிகாரிகளின் கருத்துகளை கேட்ட பின் இறுதி முடிவு எடுக்கப்படும். மற்ற துறை அதிகாரிகளுடன் விவாதிக்கப்படும். இதற்கு முன் எனது தலைமையில் கல்வித்துறை, போக்குவரத்து, போலீஸ், பள்ளி வாகன ஓட்டுநர்கள் சங்கம், பெற்றோர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.பள்ளி மாணவர்கள் பொது போக்குவரத்தில் பயணம் செய்ய வேண்டும். பெற்றோர் தங்கள் குழந்தைகளை தனி வாகனத்தில் அழைத்து வருவதை குறைக்க வேண்டும். இதற்கு மாறாக, அரசு பஸ்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவும். பஸ் பாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.பள்ளி துவங்கும், முடியும் நேரங்களில் பள்ளியை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். இது போன்ற செயல்பாடுகள், பள்ளி சுற்றுப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும்அனைத்து அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் புத்தகங்கள், ஷூ, சாக்ஸ் போன்றவை முறையாக சென்றிருப்பதை மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் அலட்சியம் காண்பிக்க வேண்டாம்.இவ்வாறு அவர் கூறினார்.