சிறிய தனியார் பள்ளிகளுக்கு பாரபட்சம்: மெட்ரிக் பள்ளி சங்க தலைவர்
சென்னை: "தனியார் பள்ளிகளுக்கு உரிய முறையில் கட்டணம் நிர்ணயிக்காத ரவிராஜ பாண்டியன் தலைமையிலான குழுவை கலைக்க வேண்டும்" என தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க தலைவர் அரசு கூறினார். அவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கட்டணக் குழுவிடம் மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு, ரவிராஜ பாண்டியன் குழு சரியான முறையில் புதிய கட்டணத்தை நிர்ணயிக்கவில்லை. அதிகளவில் கட்டணம் வசூலிக்கும் பெரிய பள்ளிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில்தான், கட்டண நிர்ணயக்குழு ஏற்படுத்தப்பட்டது. ஆனால், அந்த பள்ளிகளை அடக்குவதற்கு பதில், அதிகளவில் கட்டணங்களை நிர்ணயித்துள்ளனர். ஆனால், 10 ஆயிரம் ரூபாய்க்குள் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளுக்கு கட்டணத்தை உயர்த்தவில்லை. ஆசிரியர்களுக்கு, பாதி சம்பளம் கூட வழங்க முடியாத நிலையில் நாங்கள் இருக்கிறோம். எங்களை புறக்கணித்துவிட்டு, பெரிய பள்ளிகளுக்கு மட்டும் வாரி வழங்கியிருப்பது நியாயமில்லை. இந்த கட்டண நிர்ணயக் குழுவை, தமிழக அரசு கலைக்க வேண்டும். மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, புதுப்பித்தல் அங்கீகாரம் வழங்குவதில், துறை இயக்குனரகம் கால தாமதம் செய்கிறது. உடனுக்குடன் அங்கீகாரத்தை புதுப்பித்து வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, &'லேப்-டாப்&' வழங்கப்பட உள்ளது. இதை, தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் வழங்க வேண்டும். இலவச சைக்கிளும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். தற்போதுள்ள சமச்சீர் கல்வி திட்டத்தின் தரத்தை உயர்த்தி அமல்படுத்துவோம் என்ற தமிழக அரசின் முடிவை நாங்கள் ஏற்கிறோம். இவ்வாறு அரசு கூறினார்.