பஸ்கள் நிற்காமல் செல்வதால் மாணவர்களும், கிராம மக்களும் கடுமையாக பாதிப்பு
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே மன்னார்குடி பகுதியில் காலை நேரத்தில் பஸ்கள் நிற்காமல் செல்வதால் மாணவர்களும், கிராம மக்களும் கடுமையாக பாதிக்கின்றனர். உளுந்தூர்பேட்டையில் இருந்து நகர், மன்னார்குடி வழியாக மதியனூர் (தடம் எண் -5), ஆலடி (தடம் எண்-34), நல்லாளக்குப்பம் (தடம் எண்-9), முத்தாண்டிக்குப்பம் (தடம் எண்-207) பகுதிகளுக்கு அரசு பஸ்கள் செல்கின்றன. மன்னார்குடி வழியாக சேந்தநாடு, கூ.கள்ளக்குறிச்சிக்கு பகுதிகளுக்கும் அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. காலை நேரத்தில் அரசு பஸ்கள் மன்னார்குடி பஸ் நிறுத்தத்தில் நிற்பதில்லை. இதனால் மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்தே செல்கின்றனர். இதனால் அரசு பஸ் பாஸ் வழங்கியும், பயன்படுவதில்லை. பல மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பஸ்களில் பயணிக்கின்றனர். வேலைக்கு செல்வோரும், அவசரத்திற்கு வெளியூர் செல்வதற்காக தயாராக இருக்கும் மன்னார்குடி கிராம மக்கள் பெரிதும் பாதிக்கின்றனர். மன்னார்குடி பகுதியில் பஸ்களை நிறுத்தி மாணவர்களையும், கிராம மக்களையும் ஏற்றி செல்ல வேண்டும். கூட்டம் நெரிசலாக இருந்தால் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.