ஆக்கிரமிக்கப்பட்ட அரசு பள்ளி நிலம் வருவாய் துறையினர் சர்வே பணி
பந்தலுார்: பந்தலுார் அருகே எருமாடு மராடி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.பந்தலுார் அருகே எருமாடு மராடி பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இடத்தில், 3.5 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு, அதில் பள்ளி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன், ஊராட்சி ஒன்றியம் மூலம் பள்ளி வளாகத்தை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டது. பள்ளி வளாகம் நில அளவை செய்யாமல் பாதுகாப்பு சுவர் கட்ட பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதனை தொடர்ந்து, பள்ளி நிலம் நில அளவை செய்ய பள்ளி நிர்வாகம், வருவாய் துறைக்கு மனு அளித்தது. நேற்று தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வி.ஏ.ஓ., யுவராஜ், சர்வேயர்கள் மாணிக்கவேல், செந்தில்கண்ணன் உள்ளிட்டோர் நில அளவை செய்தனர். அதில், பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு செய்து தேயிலை பயிரிட்டுள்ளது தெரியவந்தது.தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,&'&'நில அளவை அறிக்கை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வழங்கப்படும். அவர் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, பாதுகாப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்&' என்றார். பள்ளி பி.டி.ஏ. தலைவர் சவுகத் அலி, பள்ளி மேலாண்மை குழு தலைவி அஸ்பினா உட்பட பலர் உடனிருந்தனர்.