நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்: அகிலேஷ் யாதவ் வலியுறுத்தல்
லக்னோ: நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில், 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை' என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.கடந்த மே 5ம் தேதி நடந்த நீட் தேர்வில், கேள்வித்தாள் கசிந்தது, குறிப்பிட்ட சில தேர்வு மையங்களில் மட்டும் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, இதுவரை இல்லாத அளவாக, 67 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றது, அதிகளவு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றது என, பல முறைகேடுகள் நடந்து உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இந்தாண்டு நடத்தப்பட்ட 'நீட்' தேர்வை ரத்து செய்து, புதிதாக நுழைவுத் தேர்வு நடத்தக் கோரியும், இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரியும், மாணவர்கள் சிலர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், 'நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே ஒரே நாடு ஒரே கோரிக்கை' என உ.பி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வை கை விடுங்கள்!இது குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: நீட் தேர்வை கைவிட வேண்டும். இது லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்டது. தேவைப்பட்டால் நுழைவுத்தேர்வை மாநில அரசுகளே நடத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.