ஒப்பந்த அடிப்படையில் இயக்குனர் பதவி மருத்துவ கல்வி இயக்ககம் முற்றுகை
சென்னை: சென்னை, கீழ்ப்பாக்கம் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, மருத்துவ கல்வி இயக்குனரகத்தை, ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர், நேற்று முற்றுகையிட்டனர்.அப்போது, ஓய்வு பெற்ற அரசு டாக்டர் பார்த்தசாரதியை, கிண்டி பல்நோக்கு அரசு மருத்துவமனையின் இயக்குனராக மீண்டும் நியமித்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என, அவர்கள் கோஷமிட்டனர்.அச்சங்கத்தின் தலைவர் பி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனை இயக்குனராக இருந்த பார்த்தசாரதி, கடந்த மாதத்துடன் ஓய்வு பெற்றார். அவரை மீண்டும் அப்பதவியில் கொண்டு வர முயற்சிகள் நடந்தபோதே, எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனாலும், மீண்டும் அவர் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர், இயக்குனராக இருந்தபோது வாங்கிய மருத்துவ உபகரணங்கள் பழுதடைந்துள்ளன. அங்கு, மக்கள் வரத்தும் குறைந்துள்ளது.வாங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் செயல்பாடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தற்போது, பார்த்தசாரதி ஓய்வூதியம் பெறுவதுடன், ஒப்பந்த அடிப்படையிலான ஊதியம் என, இரண்டு ஊதியங்களை பெற்று வருகிறார்.அதேபோல், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இயக்குனர் உட்பட ஏழு டாக்டர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். சீனியாரிட்டி அடிப்டையில் பதவி உயர்வுக்காக 1,000 டாக்டர்கள் காத்திருக்கும் நிலையில், ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதை அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.