முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுபட்டியல் தயாரிக்க சி.இ.ஓ.,வுக்கு உத்தரவு
சேலம்: தமிழகத்தில், 3,110 அரசு மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இவற்றில் நடப்பு கல்வியாண்டுடன், 500க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள் ஓய்வு பெற உள்ளனர். இவற்றுடன் ஏற்கனவே காலியாக உள்ள இடங்களையும் நிரப்பும்படி, பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.ஜன., 1 நிலவரப்படி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான, முதுகலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அனுப்ப, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிரியர் விபரங்களை சரிபார்த்து, கூடுதல் விபரங்களுடன் முன்னுரிமை பட்டியலுக்கு பரிந்துரைக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.விடுபட்டவர்கள் இருப்பின் சேர்க்கவும், தகுதியற்றவர்கள் இருப்பின் நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுங்கு, மேல் முறையீடு விதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை பெற்றவர்களை பரிந்துரைத்தால், முதன்மை கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.