இலவச மாணவர் சேர்க்கையை நிறுத்த அரசு திட்டமா: ராமதாஸ்
சென்னை: கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக, தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை வழங்குவதில், கால தாமதம் செய்வது அவர்களது வாய்ப்பை பறிப்பதாக உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறி உள்ளார்.அவரது அறிக்கை:கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்கள், ஏழை குழந்தைகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. இவர்களுக்கான கட்டணத்தை, மாநில அரசே செலுத்தி விடும். இதனால், ஆண்டுக்கு ஒரு லட்சம் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகள் வாயிலாக இலவச கல்வி கிடைக்கிறது.இதற்கான மாணவர் சேர்க்கை, ஜூனில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன் முடிந்துவிடும். இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, இன்னும் துவங்கப்படவில்லை. இது பல்வேறு யூகங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.கல்வி உரிமைச் சட்டப்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்காக, தனியார் பள்ளிகளுக்கு அரசு செலுத்த வேண்டிய கட்டணத்தை வழங்குவதில், கால தாமதம் செய்யப்படுகிறது. இதற்கு முடிவு கட்ட, மாணவர்களுக்கு இலவசக் கல்வி வழங்குவதையே நிறுத்திவிட, அரசு முடிவு செய்திருப்பதாக பரவும் செய்திகள், மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. இதைப் போக்க வேண்டியது, தமிழக அரசின் கடமை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.