உள்ளூர் செய்திகள்

அரசுக்கு எதிரான எத்திராஜ் கல்லுாரி வழக்கு: தள்ளுபடி செய்தது கோர்ட்

சென்னை: சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில், ஐந்து உதவிப் பேராசிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சென்னை எழும்பூரில் எத்திராஜ் மகளிர் கல்லுாரி உள்ளது. அரசு உதவி பெறும் கல்லுாரியான இதில், காலியாக இருந்த 64 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, 2021ல் நியமனங்கள் செய்யப்பட்டன.மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், தமிழ் வழியில் பயின்றோருக்கு முன்னுரிமை வழங்கப்படாமல் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டதாக கூறி, ஐந்து உதவி பேராசிரியர்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்து, கடந்தாண்டு செப்டம்பர் 3ல் கல்லுாரி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டது.இதை எதிர்த்து, திருவொற்றியூரைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் மகேஸ்வரி உட்பட ஐந்து பேராசிரியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மனுவில், 'பணியில் சேர்ந்த 64 பேரில், எங்களின் நியமனங்களுக்கு மட்டுமே ஒப்புதல் வழங்கவில்லை.இது, பாரபட்சமானது. மற்ற, 59 பேருக்கு ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, எங்களின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்து, நிலுவை ஊதியத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.இந்த வழக்கு, நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில், காலி பணியிடங்களுக்கான அறிவிப்பில், தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து எந்த தகவலும் இடம் பெறவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு பின், கடந்தாண்டு ஒப்புதல் வழங்க மறுத்து பிறப்பித்த உத்தரவு சட்ட விரோதமானது. எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து, ஒப்புதல் வழங்கும்படி கல்லுாரி கல்வி இயக்குநரகத்துக்கு உத்தரவிட வேண்டும் என, வாதிடப்பட்டது.அரசு தரப்பில், இன சுழற்சி முறையில், அரசு விதிகளின்படி, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. உரிய நடைமுறையை முறையாக செய்யாமல், கல்லுாரி நிர்வாகத்தால் செய்யப்பட்ட நியமனங்களுக்கு ஒப்புதல் தராததை எதிர்த்து, நியமனம் பெற்றவர்கள் வழக்கு தொடர முடியாது; கல்லுாரி நிர்வாகம் தான் வழக்கு தொடர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.இதை ஏற்ற நீதிபதி, பேராசிரியர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்