நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மேலும் ஒரு பேராசிரியை கைது
புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக, மஹாராஷ்டிராவின் புனேவைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியை ஒருவரை சி.பி.ஐ., நேற்று கைது செய்தது.இளநிலை மருத்துவப் படிப்புகளில் இந்தாண்டு சேருவதற்கான 'நீட்' பொது நுழைவுத் தேர்வு கடந்த 3ம் தேதி நடத்தப்பட்டது. நாடு முழுதும் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த தேர்வை எழுதினர்.தேர்வுக்கு முன்பாகவே, நீட் தேர்விற்கான வினாத்தாள் சமூக வலைதளங்களில் கசிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, 3ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு அடுத்த மாதம் 21ம் தேதி நடத்தப்பட உள்ளது.இதற்கிடையே, நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது தொடர்பாக ராஜஸ்தான், மஹாராஷ்டிரா, கேரளா, பீஹார் உட்பட நாடு முழுதும் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தி வருகிறது.இதன் அடிப்படையில் மஹாராஷ்டிராவின் நாசிக்கை சேர்ந்த சுபம் கைர்னர், புனேவைச் சேர்ந்த பேராசிரியர் குல்கர்னி, பேராசிரியை மனிஷா மாந்தாரே உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், புனேவைச் சேர்ந்த இயற்பியல் பேராசிரியை மனீஷா சஞ்சய் ஹவல்தார் என்பவரை சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். புனேவில் உள்ள சேத் ஹிராலால் சரப் பிரஷாலா பள்ளியில் ஆசிரியராக உள்ள இவர், நீட் தேர்வு வினாத்தாள் தயாரிக்கும் குழுவிலும் இருந்து உள்ளார்.தன் செல்வாக்கை பயன்படுத்தி, கடந்த ஏப்ரலில், வினாத்தாளை தரவிறக்கம் செய்த மனீஷா, அதை தன்னிடம் நீட் தேர்வு பயிற்சிக்காக பயின்ற மாணவர்களுக்கு வழங்கி உள்ளார்.இதற்காக மாணவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணமும் இவர் பெற்றுள்ளார் என சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் கைதான சிலருக்கும், மனீஷா சஞ்சய் ஹவல்தார் வினாத்தாள் வழங்கியதாகவும் அவர்கள் கூறினர்.கடந்த நான்கு நாட்களாக இவரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனீஷா ஹவல்தார் நேற்று கைது செய்யப்பட்டார்.நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் இது வரை 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணை தொடர்வதால் கைது எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.