விடைத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் சி.பி.எஸ்.இ., ஒப்புதல்!: தொழில்நுட்பத்தை வலுப்படுத்துவதாக அறிவிப்பு
புதுடில்லி: பிளஸ் 2 மாணவர்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள் இணையத்தில் எளிதாக அனைவரும் அணுகக்கூடிய வகையில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது. தொழில்நுட்பங்களை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளது. சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம், பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை இந்த முறை மறுமதிப்பீடுக்காக டிஜிட்டல் முறையில் பதிவேற்றியுள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான பின், மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறைகளுக்காக ஓ.எஸ்.எம்., எனப்படும் கணினி திரைவழி மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியது.இந்த நடைமுறையில் தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்பட்டதாக மாணவர்கள் ஏற்கனவே புகார் தெரிவித்திருந்தனர். விடைத்தாள்கள் தெளிவாக தெரியவில்லை, சில பதில்கள் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.இதையடுத்து, இந்த தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு தானே பொறுப்பேற்பதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்திருந்தார்.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பயன்படுத்திய 'அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ்' அமைப்பில் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான, 19 வயது இளைஞர் நிசர்கா அதிகாரி குற்றஞ்சாட்டினார்.இது குறித்து பல்வேறு மாணவர்களின் விடைத்தாள்களுடன் அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., நிர்வாகம் தங்களின் 'அமேசான் கிளவுட் ஸ்டோரேஜ்' பக்கத்தை சரியாக வடிவமைக்கவில்லை. இதனால், இந்த ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள்களை எளிதாக பார்க்க முடிகிறது.எந்தவித கடவுச்சொல் அல்லது அங்கீகாரம் இல்லாமலேயே, இணையத்தைப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும் இந்த விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்ய முடியும். பல கல்வி நிறுவனங்கள் ஒரே கிளவுட் பக்கத்தை பயன்படுத்துகின்றன. இது மிகவும் ஆபத்தானது; பாதுகாப்பு இல்லாதது.இவ்வாறு அவர் கூறினார்.சமூக வலைதளங்களில் வெளியான 'ஸ்க்ரீன்ஷாட்'களில், மாணவர்களின் கையெழுத்து பிரதிகள், மதிப்பீட்டு தாள்கள் மற்றும் கூடுதல் விடைத்தாள்கள் பொதுவெளியில் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.சமூக வலைதளங்களில் இது தொடர்பாக பரவிய 'ஸ்க்ரீன்ஷாட்'களில், மாணவர்களின் விபரங்களுடன் கூடிய விடைத்தாள்கள் இருந்தன.இந்த சம்பவத்திற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும் விமர்சனங்களை முன்வைத்தன.இதற்கிடையே, பாதுகாப்பு குறைபாடுகளை சுட்டிக்காட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ., இது போன்ற புகார்களை அதிகாரப்பூர்வ வழிகளில் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.சி.பி.எஸ்.இ., நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:எங்களின் சேவை வழங்கும் நிறுவனத்தின் 'ஆன்மார்க்' இணையதளத்தில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எழுப்பப்பட்ட புகார்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.கடந்த சில நாட்களாக, இந்த அமைப்புகளை பலப்படுத்துவதற்காகவும், மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பிற்கு மாற்றுவதற்காகவும் பல்வேறு அரசு துறைகள் மற்றும் சென்னை ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.கண்டறியப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் மற்ற பலவீனங்களும் ஆராயப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.விடைத்தாள் இல்லாமல் துவங்கும் மறுமதிப்பீடு சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்களில், விடைத்தாள் நகல் கோரிய பலருக்கு, இன்னும் அது கிடைக்காததால், அவர்கள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று முதல் மறுமதிப்பீடு துவங்க உள்ளன. அந்த பணிகளுக்காக குறிப்பிட்ட பள்ளிகளுக்கு, விடைத்தாள் நகல்கள் அனுப்பப்படும் என்று பள்ளி முதல்வர்களுக்கு சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. இதனால், விடைத்தாள் நகல் கிடைக்காத பெற்றோரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.