குரூப் - டி காலிப் பணியிடங்களுக்கான தேர்வை 55 ஆயிரம் பேர் எழுதினர்
சென்னை: தெற்கு ரயில்வேயில், குரூப் - டி காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், 55 ஆயிரம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். தெற்கு ரயில்வேயில், நான்காம் நிலையில் (குரூப்- டி) 5,450 காலிப் பணியிடங்களை நிரப்ப, 2013 ஆகஸ்ட்டில் அறிவிப்பு வெளியானது. இந்த பணிகளுக்கு, தமிழகம், கேரளா, உத்தரபிரதேசம், பீகார், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து, 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கான தேர்வு, நவ., 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. நேற்று 9ம் தேதி, தேர்வுக்கு, இரண்டு லட்சம் பேருக்கு, ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. சென்னை, திருச்சி, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட கோட்டங்களில், 225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற தேர்வை, 55 ஆயிரம் பேர் எழுதியதாக தெற்கு ரயில்வே அதிகாரி தெரிவித்தார். குரூப் - டி தேர்வு: தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய ஆறு கோட்டங்களில், ரயில் பாதை பராமரிப்பாளர், கண்காணிப்பாளர் மற்றும் மின் உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களை, சென்னையில் உள்ள ரயில்வே தேர்வுக் குழுமம் (ஆர்.ஆர்.சி.,) தேர்வு செய்கிறது.