மாவட்ட அரசு இசை பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி, சதாவரத்தில், மாவட்ட அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 12 - 25 வயதுக்கு உட்பட்டோருக்கு குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் உள்ளிட்டவை பயிற்றுவிக்கப்படுகிறது.மேலும், பள்ளி மாணவர்களுக்கு ஜவஹர் சிறுவர்மன்றம் சார்பில், பகுதி நேரமாக இசை, நடனம், ஓவியம்கைவினை வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நுாற்றுக்கணக்கானோர் இங்கு பல்வேறு இசை பயிற்சி பெற்று வருகின்றனர்.நுாற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் இசை கற்கும், அரசு இசை பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் வசதி இல்லை. அதேபோல, இக்கட்டடத்தின் முன்பக்கம் மழைநீர் தேங்கியுள்ள குளத்திற்கு சுற்றுச்சுவர் இல்லை.இதனால், இசைப் பள்ளிக்கு வந்து செல்லும் சிறுவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. எனவே, இங்கு பயிலும்மாணவ - மாணவியரின் நலன் கருதி, இசைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.