உள்ளூர் செய்திகள்

மருத்துவ மாணவர் மர்ம மரணம் வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கால்நடை மருத்துவ பல்கலை மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கு, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது.கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வயநாட்டில் உள்ள பூக்கோட்டில் கால்நடை மருத்துவ பல்கலை செயல்பட்டு வருகிறது.இங்கு கால்நடை அறிவியல் மற்றும் கால்நடை பராமரிப்பு இளங்கலை பாடப்பிரிவில் பயின்ற சித்தார்த்தன், 20, என்பவர் கடந்த மாதம் 18ல் பல்கலை விடுதி குளியல் அறையில் துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ.,யைச் சேர்ந்தவர்களால், ராகிங் செய்யப்பட்டு, அடித்துக் கொல்லப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.உடற்கூராய்வு அறிக்கையில், மாணவர் உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்ததும், இரண்டு நாட்களாக எந்த உணவும் கொடுக்காமல், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டது சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.இந்த விவகாரத்தில், அதே பல்கலையைச் சேர்ந்த மாணவர்கள், 18 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என உயிரிழந்த மாணவர் குடும்பத்தினர் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, மாணவர் மரண வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படுவதாக முதல்வர் பினராயி விஜயனின் அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இறந்த மாணவரின் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்படுவதாக கூறப்பட்டுள்ளது.இது குறித்து சித்தார்த்தனின் தந்தை கூறுகையில், என் மகன் உயிரிழந்த விவகாரத்தில் பல்கலை டீன், விடுதி உதவி வார்டன் ஆகியோர் பதவிநீக்கம் மட்டும் போதாது. அவர்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர்கள் இருவர் குறித்த மேலும் பல தகவல்களை சி.பி.ஐ.,யிடம் தெரிவிப்பேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்