உள்ளூர் செய்திகள்

துவக்கப்பள்ளியில் இருந்து தமிழ் படிக்க வேண்டும்: சிரவை ஆதினம்

கோவை: ஒரு மொழி வளரவேண்டும் என்றால், அந்த மொழியை குழந்தைகள் துவக்கப்பள்ளியில் இருந்து படிக்க வேண்டும் என சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார் பேசினார்.கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் செம்மொழித் தமிழ் மன்றம் சார்பில், இலக்கிய சந்திப்பு கூட்டம் நுாலக அரங்கில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, செம்மொழித் தமிழ் மன்றத்தலைவர் கீதாதயாளன் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற, சிரவை ஆதினம் குமரகுருபர அடிகளார் பேசியதாவது:தமிழ் அமைப்புகளுடன் நுாலகத்துறை, இணைந்து நடத்துவது இலக்கிய வளர்ச்சிக்கு உதவும். சென்னையிலும், மதுரையிலும் நவீன வசதியுடன் நுாலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவையிலும் அதுபோன்ற ஒரு நுாலகம் அமைக்கப் போவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.அறிவு சார்ந்த நுாலகங்கள் அமைக்கும் போதுதான், சமூகத்தில் குற்றச்செயல்கள் குறையும். நல்ல நுால்கள், மனிதர்களை நல்ல சிந்தனை உள்ளவர்களாக மாற்றும். பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு, நம்மிடம் தான் உள்ளது.தமிழ் வழியில் பயிலும் குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஒரு மொழி வளரவேண்டும் என்றால், அந்த மொழியை குழந்தைகள் துவக்கப்பள்ளியில் இருந்து படிக்க வேண்டும். தமிழகத்தில் அந்த சூழ்நிலை இல்லை. இந்த நிலை மாற வேண்டும் என்றால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை, தமிழ் வழியில் படிக்க வைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.புலவர்கள் ரவீந்திரன், அப்பாவு, கிருஷ்ணா, சம்பத், சுதாதேவி உள்ளிட்டோர் கருத்துரை வழங்கினர். பேராசிரியர் புவனேஸ்வரி தலைமையில், செந்தமிழ் நாடெனும் போதினிலே என்ற தலைப்பில் கவியரங்கம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்