உள்ளூர் செய்திகள்

பாடப்புத்தகமும் பயிற்சி புத்தகமும் பள்ளிகளுக்கு தேவை ஒரே புத்தகம்

கோவை: ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பாடப்புத்தகம் மற்றும் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் பயிற்சி புத்தகங்களை, ஒரே தொகுப்பாக ஒருங்கிணைத்து, வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், செயல்வழி அடிப்படையிலான கற்றல் முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.திட்டத்தின் கீழ், மாணவர்கள் 'அரும்பு', 'மொட்டு', 'மலர்' என மூன்று நிலைகளாகப் பிரிக்கப்பட்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், பயிற்சி புத்தகங்களின் வாயிலாக, செயல்வழி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.தொடக்கத்தில், 1 முதல் 3ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கே, இந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 2024 கல்வியாண்டு முதல், 4ம் மற்றும் 5ம் வகுப்புகளுக்கும் இந்த பயிற்சிகள் விரிவாக்கப்பட்டன.இதற்கான துணை புத்தகமாக, 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி புத்தகம் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அரசு வெளியிடும் பாடப்புத்தகமும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், ஒரு வகுப்பு மாணவர்களுக்கு, இரண்டு புத்தகங்கள் மூலம் கற்றல் நிகழ்கிறது.ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகத்தின் வாயிலாக, 70 சதவீதம் பாடங்களை கற்றுத்தருகிறோம். இதில், செயல்வழி பயிற்சிகள் அதிகமாக உள்ளன.பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களும், இதையே அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளன. வேலைப்பளு காரணமாக, சில நேரங்களில் பாடப்புத்தகத்தை புறக்கணிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, ஒரே ஆசிரியரே பல வகுப்புகளை கையாள வேண்டிய நிலை உள்ளது. இரண்டு புத்தகங்களையும் ஒரே நேரத்தில் கற்றுத்தருவது சவாலாகிறது.இரண்டு புத்தகங்களையும் ஒரே புத்தகமாக இணைத்து வழங்கினால், கற்பித்தல் எளிதாகும்; மாணவர்கள் புரிந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்