வாய்ப்புகளை தவற விட்டவர்கள் வெற்றி பெற முடியாது
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற வழிகாட்ட டி.வி.ஆர்., அகாடமி சார்பில் தினமலர் நாளிதழ் நடத்தும் "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சி நேற்று போடியில் வாரச்சந்தை அருகில் உள்ள பாஸ்கரா திருமண மண்டபத்தில் நடந்தது. 10ம் வகுப்பு ஆசிரியர்கள் வழங்கிய டிப்ஸ்: * ஆர்.மணி, அரசு மேல்நிலைப்பள்ளி, சில்லமரத்துப்பட்டி, ஆங்கிலம்: ஆங்கிலம் என்ற அச்சம் முதலில் நீங்க வேண்டும். மனப்பாட கவிதை, சிறு வினா, மற்றும் 5 மதிப்பெண் வினாவையும் பலமுறை எழுதி சிறு தவறுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். பாடப்புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்தின் பின்னால் உள்ள பயிற்சியை தெளிவாக புரிந்து கொண்டு விடையளித்து பார்க்க வேண்டும். டிவி பார்ப்பதை தவிர்த்து, இலக்கண பகுதிகளை தெளிவாக புரிந்து எழுத வேண்டும். விளம்பர பகுதி, தலைப்பு விரித்து எழுதுதல், சிறுகுறிப்பு மற்றும் பத்தி விரித்து எழுதுவதில் எளிதில் மதிப்பெண் பெறலாம். * எஸ்.முருகேசன், ஜ.கா.மே.நி.பள்ளி போடி, கணிதம்: முதல் பாடப் பிரிவான கணங்கள் மற்றும் சார்புகள் பாடத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். முதல் பாடம், வரைபடம், செய்முறை வடிவியல் கணக்குகளை செய்தாலே எளிதில் தேர்ச்சி பெற்று விடலாம். முதல் ஐந்து பாடப்பிரிவுகளில் நன்கு தெளிவு பெற்றிருந்தால், 90 மதிப்பெண்கள் பெற்று விடலாம். வரைபடப் பாடப்பிரிவில் இரண்டாவது பயிற்சியில் 9 வினாக்களே உள்ளன. இதில் ஒன்று கண்டிப்பாக கேட்கப்படும். வரைபடம், செய்முறை வடிவியல் இரண்டிற்கும் சேர்த்து 20 மதிப்பெண்கள் பெறலாம். * டி.ஹரிகரன், ஜ.கா.நி.மே.நி.பள்ளி, போடி, அறிவியல்: ஐந்து மதிப்பெண் வினாக்களுக்கு விடையளிக்கும் போது, அதில் ஒரு மதிப்பெண் மற்றும் இரண்டு மதிப்பெண்களுக்கான விடைகளை அறிந்து கொள்ள வேண்டும். அறிவியல் பாடங்களில் உள்ள படங்களை வரைந்து பாகங்களை குறித்து, பழகி வருவதன் மூலம் 10 மதிப்பெண்களை எளிதில் பெறலாம். பொருத்துக மற்றும் பிழைகளை சரிசெய்தல் போன்ற பயிற்சிகளை அறிதல் மூலம் 8 மதிப்பெண்களை எளிதில் பெறலாம். * எஸ்.கவுதம், அரசு மேல்நிலைப்பள்ளி, ஓடைப்பட்டி, சமூக அறிவியல்: கேள்விகளை எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம். கேள்வி எண்களை சரியாக எழுத வேண்டும். விடைகளை சரியான வரிசைப்படி எழுத வேண்டும். வரிசையை மாற்றி எழுதினால் திருத்தும் ஆசிரியரை குழப்பத்தில் தள்ளி விடும். இதனால் மதிப்பெண்கள் குறைந்து விடும். காலக்கோடு, வரைபட பயிற்சி ஆகியவற்றிற்கு பதில் அளிக்கும் போது, நிதானமாகவும், தெளிவாகவும் பதில் அளிக்க வேண்டும். பிளஸ் 2: * டி.துரைப்பாண்டியன், அரசு மேல்நிலைப்பள்ளி, சிலமலை, ஆங்கிலம்: "சினானிம்ஸ், ஆண்டனிம்ஸ், கிராமர்" கேள்விகள் புத்தகத்தில் உள்ள பாடத்தின் பின்புறம் உள்ள கேள்விகளில் இருந்து கேட்கப்படும். ஆங்கிலத்தில் எஸ்சே எழுதும் போது, இன்ட்ரடக்சன், சப்ஹெட்டிங், கன்குளுசன்" போன்றவற்றை எழுத வேண்டும். ஆங்கிலம் இரண்டாம் தாளில் கதைப்பகுதியில் "சப்ளிமென்டரி ரீடர்" பகுதிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் இந்த கதைப்பகுதியில் இருந்து 25 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும். * கே.ஆர்.ராம்சுந்தர், ஜ.கா.நி.மே.நி.பள்ளி போடி, கணிதம்: "ஏ&'&' பகுதியில் கேட்கப்படும் 40 வினாக்களில் 30 வினாக்கள் பாடப்புத்தகத்தின் பின்பகுதியில் கொடுக்கப்பட்ட 271 வினாக்களில் இருந்து கேட்கப்படும். இந்த வினாக்களை நகல் எடுத்து திரும்ப திரும்ப விடை எழுதி பயிற்சி பெறுவது அவசியம். முதல் தொகுதியில் முழு கவனம் செலுத்தினாலே 130 மதிப்பெண் பெறலாம். கட்டாய வினாக்களை அவசரத்தில் மறந்து விடாமல் எழுத வேண்டும். படம் வரைய வேண்டிய இடத்தில் அவசியம் வரைய வேண்டும். * எஸ்.காமராஜ், ஜ.கா.நி.மே.நி.பள்ளி, போடி, இயற்பியல்: ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு 10 பாடத்திலும் பின்புறம் உள்ள 134 வினாக்களையும் நன்கு படிக்க வேண்டும். பக்கம் தவறாமல் சமன்பாடுகளையும், வாய்ப்பாடுகளையும் படிக்க வேண்டும். 3 மதிப்பெண் வினாக்களில் விதிகள், பயன்கள், வேறுபாடுகள், பண்புகள் என்பன போன்ற வினாக்களை தவறாமல் படிக்க வேண்டும். 5 மதிப்பெண் வினாக்களை பொறுத்தவரை 1,2,4,6,7,8 பாடங்களில் உள்ள வினாக்களை படித்தால் போதும். கட்டாய கணக்கிற்கு 1,3,5,7,8,9, பாடங்களில் உள்ள கணக்குகளையும் மற்ற பாடங்களில் உள்ள கணக்குகளையும் படிக்க வேண்டும். * எஸ்.ராமசுப்பிரமணி, ஜ.கா.நி.மே.நி.பள்ளி, போடி, வேதியியல்: வேதியியல் பாடத்தில், 4,5,6,7,8,9, 10,17 ஆகிய பாடங்களை முழுமையாக படித்தால் போதுமானது. 100 மதிப்பெண்கள் பெற 12, 13, 21, 22 பாடங்களையும் தெளிவாக படிக்க வேண்டும். கனிம, கரிம வேதிச்சமன்பாடுகளை படித்து திரும்ப, திரும்ப எழுதி பார்க்க வேண்டும். கரிம வேதியியலில் வரும் பெயர் வினைகளை நன்றாக படிக்க வேண்டும். அது கரிமவேதியியல் கணக்கீடு பகுதிக்கு உதவியாக இருக்கும். ஒரு மதிப்பெண் வினாவிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து படிக்க வேண்டும். * காலை, மாலை இரண்டு அமர்வுகளிலும் தன்னம்பிக்கை குறித்து உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர் எம்.அப்துல்சமது பேசியதாவது: புதிய விஷயங்களை திரும்ப, திரும்ப படிக்க வேண்டும். நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். வாய்ப்புகளை தவற விட்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. வலியை தாங்குகிறவர்களே வாழ்வில் வெற்றி பெற முடியும். பெண்களுக்கு இடஒதுக்கீடு கேட்ட காலமெல்லாம் மாறிப்போய், எல்லாத் துறைகளிலும், பெண்கள் சாதிக்கும் காலம் உருவாகி விட்டது. இவ்வாறு பேசினர். நிகழ்ச்சியை, இணைந்து வழங்கியோர், ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரி, எழுமலை திருவள்ளுவர் பாலிடெக்னிக் கல்லூரி, திண்டுக்கல் சுரபி கல்வி நிறுவனங்கள், போடி இளையகாட் டிரஸ்ட், சில்லமரத்துபட்டி கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரி, பூர்விகா மொபைல் வோர்ல்டு. பேராசிரியர் எம்.அப்துல்சமது பேசுகையில், "சுவாலா" என்ற பறவை கலிபோர்னியாவில் இருந்து 5,000 கி.மீ., தூரம் கடற்பரப்பை கடந்து பறந்து அர்ஜென்டினா வந்து இனப்பெருக்கம் செய்து விட்டு, மீண்டும் 5,000 கி.மீ., தூரம் பறந்து கலிபோர்னியா செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த அதிசயம் நடக்கிறது. இந்த தொலைவை கடக்க 2 மாதம் ஆகும். இவ்வளவு தூரம் ஒரு பறவையால் எப்படி விடாமல், உணவு, குடிநீர் இல்லாமல் பறக்க முடிகிறது. இந்த சுவாலா பறவை பறக்க தொடங்கும் முன், ஒரு குச்சியை தனது வாயில் கவ்விக் கொண்டு பறக்கும். ஓய்வும், உணவும் தேவைப்படும் நேரத்தில் கடற்பரப்பில் இறங்கி குச்சியை கடலில் போட்டு அதன் மேல் நின்று கொண்டு இரை தேடிக்கொள்ளும். ஓய்வு எடுத்துக் கொள்ளும். இதேபோல் தொடர்ச்சியாக ஆண்டிற்கு 4 மாதங்கள் பறக்கிறது. பறவையாலேயே இது முடியும் போது, சகல சக்தியும் படைத்த மனிதனால் ஏன் சாதிக்க முடியாது" என்றார்.