உள்ளூர் செய்திகள்

கோவை மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில் சிக்கல்

கோவை: இந்திய மருத்துவ கவுன்சிலின் நடவடிக்கையால், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோவை அரசு மருத்துவக் கல்லுாரியின், எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கையை, 150லிருந்து, 250ஆக உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில், இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வுக்கு பின், 20க்கும் மேற்பட்ட குறைகளை சுட்டிக்காட்டி, கூடுதல் சீட்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது எனவும், தற்போது படிக்கும் மாணவர்களுக்கும் அடிப்படை வசதியில்லாததால், 2015-16 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு தடை விதிக்கவும், கல்லுாரியின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் அறிக்கை அளிக்கப்பட்டது. மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய, சில குறைகளை சரிசெய்ததையடுத்து, தற்போதுள்ள சீட்டுகளை நிரப்ப அனுமதி கிடைத்தது. இந்நிலையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு, பிரச்னை ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின்ஜோ கூறியதாவது: இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய, குறைகளை நிவர்த்தி செய்தோம். தமிழக சுகாதார துறையும் பிரச்னையை சரிசெய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறது. தேவையான ஆவணங்கள், கவுன்சிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவை கூடுதல் இடங்களுக்காக அனுப்பப்பட்ட ஆவணங்கள் என கருதிய, கவுன்சில் உறுப்பினர்கள், அதற்கான விளக்கம் கேட்டனர். கல்லுாரி நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. ஏற்கனவே உள்ள, 150 சீட்டுகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. கூடுதல் இடங்களை விரைவில் பெறுவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்