உள்ளூர் செய்திகள்

மாணவர்களை வெளியில் அனுப்புவது தவறு: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை: அரசு பள்ளி மாணவர்களை வெளியில் அனுப்புவது தவறு என மயிலாடுதுறை முதன்மைக் கல்வி அலுவலர் ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகேவுள்ள வைத்தீஸ்வரன் கோவிலில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பள்ளி வேலை நேரத்தில், மாணவர்கள் சிலர் சாலையில் சுற்றித் திரிந்துள்ளனர். பணி நிமித்தமாக சீர்காழி நோக்கிச் சென்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி மாணவர்கள் சாலையில் நிற்பதைக் கண்டு தனது வாகனத்தை நிறுத்தி அவர்களை அழைத்து விசாரித்துள்ளார். விசாரணையில், மாணவர்களை பள்ளியில் உள்ள சில ஆசிரியர்கள் சொந்த பணிக்காக கடைக்கு அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களை அழைத்து இனிமேல் இதுபோன்று செயல்படக் கூடாது என எச்சரித்து சென்றார்.இச்சம்பவத்தை குறிப்பிட்டு மாணவர்களை வெளியில் அனுப்பியது தொடர்பாக தொடர்புடைய ஆசிரியரிடம் விளக்கம் கேட்டு, ஒரு நாள் ஊதியத்தை நிறுத்தி வைக்க ஆணையிடப்பட்டு உள்ளதாக முகநூலில் பதிவுகள் பகிரப்பட்டன. இந்நிலையில் முதன்மைக் கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, கடைவீதியில் மாணவர்கள் நின்ற நிலையில், அது குறித்து அவர்களிடம் கேட்டபோது, ஆசிரியர் அனுப்பியது குறித்து கூறினர்.மாணவர்களை ஆசிரியர்கள் வெளியில் அனுப்பக் கூடாது என்று நிலையான உத்தரவு உள்ளது. மாணவர்களை தங்கள் பயன்பாட்டுக்காக ஆசிரியர்கள் வெளியில் அனுப்புவது தவறு. இந்த உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்