ஆடல் கலையில் அசத்திய அரசு பள்ளி மாணவியர்
சாதனையாளர்கள் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகின்றனர், என்பார்கள். அந்த வகையில் திறமைசாலிகளை அடையாளம் கண்டு அவர்களின் திறமையை மெருகேற்றி, சாதனையாளர் என்ற மகுடத்தை சூட செய்வோர் தான், ஆசான்கள் என்ற வார்த்தைக்கு உண்மையில் அழகு சேர்ப்பவர்கள்.அவ்வகையில், சமீபத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், மாநில அளவிலான கலை இலக்கிய விழா போட்டி களில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில் புதைந்துள்ள திறமைகள், வெளிப்படுகின்றன. இதில், 6 முதல், 8ம் வகுப்பு வரையிலான பிரிவில், பழங்கரை ஊராட்சி, பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் அட்சயா கீர்த்தி, தனிஷா, அனுஸ்ரீ, மதுயாழினி ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பெற்று, அசத்தியுள்ளனர்.மாணவியருக்கு பயிற்சி அளித்த, அதே பள்ளியின் முன்னாள் மாணவியும், நடன ஆசிரியையுமான மதுமிதா, கூறியதாவது:திருவள்ளுவர் அரசுப்பள்ளில தாங்க நானும் படிச்சேன். அப்பவே, மேடை நிகழ்ச்சிகளில் கலந்துட்டு பரத நாட்டியம் ஆடுவேன். நடனக்கலையில், நிறைய சாதிக்கணும்ன்னு ஆசை இருந்துச்சு. ஆனா, பள்ளியில படிக்கிறப்போ அது நடக்கல.பள்ளி படிப்பு முடிச்சு, பரதக்கலை சம்பந்தமாவே பட்டப்படிப்பு படிச்சேன்; நடனப்பள்ளி வைச்சு, பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். சாதாரண குடும்பத்து பிள்ளைங்க தான் எங்கிட்ட நடனம் கத்துக்கிறாங்க. இதுல, இந்த பிள்ளைகளும் நாலு வருஷமா என்கிட்ட நடனம் கத்துக்கிறாங்க.பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில அளவில தேர்வு செய்வதாக, அறிவிப்பு வெளியானது. இதற்காக, எங்க பள்ளி குழந்தைகளை தயார்படுத்தினோம். தலைமையாசிரியரும், ஆசிரியர்களும் ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தாங்க... குறிப்பா, அந்த குழந்தைகளோட பெற்றோர் ரொம்பவே ஊக்குவிச்சாங்க... பள்ளி அளவுல நடந்த போட்டியில ஜெயிச்சு, மண்டல, மாவட்ட அளவில் நடந்த போட்டியிலேயும் ஜெயிச்சு, மாநில போட்டியில கலந்துக்கிட்டு, முதல் பரிசை வாங்கியிருக்காங்க.இது ரொம்ப பெருமையா இருக்குதுங்க. அவங்களோட முயற்சி, பள்ளி நிர்வாகம், பெற்றோர் தான், இதுக்கு காரணம். இனி, அவங்களை அடுத்தடுத்து நடக்கிற நிறைய போட்டிகள்ல பங்கெடுக்க செய்யணும்னு ஆசைப்படறேன். அதுக்காக, அவங்களை தயார்படுத்தப்போறேன்.