உள்ளூர் செய்திகள்

கிளாட் நுழைவுத் தேர்வில் சிவகங்கை மாவட்டம் முதலிடம்

சிவகங்கை: தேசிய கல்வி நிறுவனங்களில் சட்டப் படிப்புகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்வில் அரசு மாதிரிப் பள்ளிகளில் மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.கிளாட் நுழைவுத் தேர்வு டிச.3 அன்று நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் டிச.10 அன்று வெளியிடப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் சார்பாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இக்கல்வியாண்டில் தேசிய அளவிலான சட்டக் கல்லுாரிகளில் சேர கிளாட் நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பிக்க இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.4000 வீதமும், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூ.3500 வீதமும் விண்ணப்பக் கட்டணம் செலுத்த நிதி விடுவிக்கபட்டது.சிவகங்கை மாவட்டத்தில் 23 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 81 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இம்மாணவர்கள் விண்ணப்பித்தது முதல் நுழைவுத் தேர்வு எழுதும் வரை மாவட்டத்திட்ட அலுவலகத்தில் இணைய வழிக் கூட்டத்தின் மூலம் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.கலெக்டர் உத்தரவின் பேரில் நவ.18 முதல் 30 வரை கிளாட் நுழைவுத் தேர்விற்கு விண்ணபித்த மாணவர்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து செய்திருந்தார்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், நான் முதல்வன் திட்டத்தின் நோக்கமே அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் வாய்ப்பை உருவாக்குவதே என்பதை மெய்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டத்தில் 19 மாணவர்கள் கிளாட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று கலந்தாய்வுக்குத் தேர்வாகியுள்ளனர்.9 மாணவர்கள் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், 10 மாணவர்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்கள். இதில் 6 மாணவர்கள் மாற்றுத் திறனாளி மாணவர்கள் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்