உடல் தளர்ந்தாலும் மனம் தளராத பழங்குடி இளைஞர்
பந்தலுார்: பந்தலுார் பகுதியில் குரும்பர் பழங்குடி மாற்று திறனாளி இளைஞர் முதுகலை; ஆசிரியர் பயிற்சி முடித்தும் இதுவரை பணி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்.பந்தலுார் அருகே கள்ளிச்சால் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபேஷ்,34. இவர் எம்.எஸ்.சி., பட்டப்படிப்பு நிறைவு செய்து, ஆசிரியர் பயிற்சி முடித்து, தற்போது முனைவர் பட்டம் பெறுவதற்காக படித்து வருகிறார். குரும்பர் சமுதாயத்தை சேர்ந்த இவர் கடந்த காலங்களில் நல்ல உடல் திறனுடன் இருந்துள்ளார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வீட்டு தோட்டத்தில் மரத்தில் ஏறி பாக்கு பறித்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவர், தற்போது சக்கர நாற்காலி துணையுடன் மட்டுமே சென்று வருகிறார்.கல்வி தகுதி இருந்தும் இவருக்கு எந்த பள்ளியிலும் பணி தரவில்லை. எனினும் மனம் தளராமல் கொரோனா காலத்தில் குடை தயாரிக்கும் பயிற்சி பெற்றார். அதன்பின், எருமாடு பஜாரை ஒட்டிய பகுதியில், சிறிய கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, குடை தயாரிக்கும் பணியும் மேற்கொண்டு வருகிறார். இன்னும் ஒரு ஆண்டில் முனைவர் பட்டம் பெறும் பணியில் ஈடுபட்டுள்ளார்.பழங்குடியினர் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், இவரின் படிப்புக்கு ஏற்ற வகையில், உள்ளூரில், அரசு பள்ளிகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து, முதல்வருக்கும், கலெக்டருக்கும் கோரிக்கை மனு அனுப்பி உள்ளோம், என்றார்.