உள்ளூர் செய்திகள்

கழிப்பறையை சுத்தம் செய்த மாணவர்கள்; ஆசிரியை சஸ்பெண்ட்

பெங்களூரு: கோலாரில் மாணவர்களை, செப்டிங் டேங்கை சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி மறையும் முன்பே, பெங்களூரின் ஆந்திரஹள்ளியில், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியை லட்சுமி தேவம்மா, சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.கோலாரில், அரசு பள்ளியில் செப்டிங் டேங்கை, சுத்தம் செய்வதில் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதை பலரும் கண்டித்தனர். இந்த சம்பவம் மறப்பதற்குள் மற்றொரு சம்பவம் நிகழ்ந்து உள்ளது.பெங்களூரின் யஷ்வந்த்பூர் தொகுதியின், ஆந்திரஹள்ளியில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. இங்குள்ள கழிப்பறையை, மாணவர்களை சுத்தம் செய்ய வைத்துள்ளனர். இச்சம்பவம் தெரிய வந்ததும் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் வன்மையாக கண்டித்துள்ளனர். பிரச்னை பெரிதாவதை அறிந்து கொண்ட மாநில அரசு, ஆந்திரஹள்ளி பள்ளி ஆசிரியை லட்சுமி தேவம்மாவை, சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:ஆந்திரஹள்ளி அரசு பள்ளியில், சிறார்களுக்கு சாக்லெட் ஆசை காண்பித்து, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்துள்ளனர். இது போன்ற சம்பவம் சமீபத்தில் கோலாரிலும் நடந்தது. ஆந்திரஹள்ளி பள்ளியில் 600 மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு படிக்கும் அனைவரும், ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.இது பற்றி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், உள்ளூர் மக்களிடம் பேசினேன். கல்வி அதிகாரி தெரிவித்த தகவலின்படி, பள்ளியின் துாய்மையை காப்பாற்ற, 30 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை.தங்களுக்கு சாக்லேட் ஆசை காண்பித்து, கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்ததாக, மாணவர்களே கூறியுள்ளனர். அவர்களுக்கு எந்த பாதுகாப்பு சாதனமும் கொடுக்காமல், ஆசிட் கொடுத்து சுத்தம் செய்ய வைத்துள்ளனர். அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், &'எக்ஸ்&' சமூக வலைதளத்தில் நேற்று கூறியதாவது:அப்பாவி சிறார்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்திருப்பது, உண்மையில் கண்டிக்கத்தக்கது. பணத்தை மிச்சப்படுத்த, மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்துவது நல்லதல்ல.அரசு பள்ளிகளில், துப்புரவு செய்வது, மதிய உணவு தயாரிப்பது உட்பட, அனைத்து விஷயங்களுக்கும் தெளிவான நடைமுறை இருக்க வேண்டும். இதை பள்ளிகளில் கடுமையாக செயல்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.இதுகுறித்து யஷ்வந்த்பூர் பா.ஜ., எம்.எல்.ஏ., சோமசேகர் கூறியதாவது:என்ன நடக்க கூடாதோ, அது நடந்துள்ளது. இது எதிர்க்கட்சி தலைவரின் கவனத்துக்கும் சென்றுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளியில் பிரச்னைகள் இருந்தால் சரி செய்வேன். பள்ளியில் நிதி பற்றாக்குறை இல்லை. கிடைத்த நிதியுதவியை சரியாக பயன்படுத்தவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.சம்பவம் குறித்து கல்வித்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன். இத்தகைய பணிகளுக்கு மாணவர்களை பயன்படுத்துவது தவறு. இது குறித்து, கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட வேண்டும். மாணவர்களை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர், ஜி.பரமேஸ்வர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்