படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
செங்கல்பட்டு: படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஜன. 1ம் தேதியுடன் துவங்கும் காலாண்டிற்கு, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து, வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பத்தாம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி மற்றும் அதற்கு மேலான கல்வித்தகுதிகளை பெற்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். கடந்த ஆண்டு டிச. 31ம் தேதி நிலையில், ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும் மார்ச் 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.அனைத்து வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், அனைத்து அசல் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்துடன், நேரிலும் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.