வால்பாறை அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மந்தம்
வால்பாறை: அரசு பள்ளிகளில் எதிர்பார்த்த அளவுக்கு மாணவர்கள் சேர்க்கை கிடைக்காததால், ஆசிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.வால்பாறையில் உள்ள அரசு பள்ளிகளில், பல்வேறு எஸ்டேட் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் அதிக அளவில் படிக்கின்றனர். இந்நிலையில் மாணவர்கள் சேர்க்கை குறைவால், பெரும்பாலான பள்ளிகளில், விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே மாணவர்கள் படிக்க்கின்றனர்.ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சித்திட்ட மேற்பார்வையாளர் ராஜாராம் கூறியதாவது:வால்பாறையில் பல்வேறு காரணங்களால், தொழிலாளர்கள் தொடர்ந்து எஸ்டேட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில், ஆண்டு தோறும் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.வால்பாறை தாலுகாவில் உள்ள அரசு துவக்கப்பள்ளிகளில், நடப்பாண்டில் இது வரை, 120 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். வெளிமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், அதிக அளவில் பள்ளியில் சேர்ந்து தமிழ் படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களை கண்டறிந்து, பள்ளியில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு, கூறினார்.