உள்ளூர் செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு: ஈ.டி., சோதனை

சென்னை: அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு முறைகேடு மற்றும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து, சென்னை, திருச்சி, கோவை உட்பட, 18 நகரங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.கடந்த, 2017ம் ஆண்டு செப்டம்பரில், அ.தி.மு.க., ஆட்சியில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு 1,058 விரிவுரையாளர்களை தேர்வு செய்ய, டி.ஆர்.பி., எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.இத்தேர்வுக்கு, 1.33 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு அதே ஆண்டில், நவ., 7ம் தேதி எழுத்து தேர்வு நடத்தப்பட்டு, முடிவு வெளியிடப்பட்டது. அதில், மொத்த மதிப்பெண், 190க்கு ஏராளமானோர், 120 மதிப்பெண்கள் பெற்று இருந்தனர். தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று இருந்தனர்.இது ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, அப்போது வாரியத்தின் உறுப்பினர் செயலராக இருந்த உமா, சென்னை மாநகர போலீசில் புகார் அளித்தார். இது குறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.அப்போது, மதிப்பெண்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் போது முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, ஆசிரியர் தேர்வு வாரிய தற்காலிக ஊழியர்கள், இடைத்தரர்கள் மற்றும் பணம் கொடுத்து குறுக்கு வழியில் வேலைக்கு சேர முயன்றவர்கள் என, 156 பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இம்முறைகேடு தொடர்பாக, இடைத்தரகராக செயல்பட்ட முக்கிய குற்றவாளிகள், சென்னை கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பரமசிவம், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த நாதன், மற்றும் தாவூத் நாசர், ரகுபதி, சுரேஷ்பால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.தொடர் விசாரணையில், அரசியல்வாதிகளும் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இம்முறைகேடு தொடர்பாக, கடந்த, 2021ல், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.இந்நிலையில், இம்முறைகேட்டில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது பற்றி அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், இடைத்தரகர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய தற்காலிக ஊழியர்கள் வீடு என, 18 இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை அண்ணா நகரில் செந்தில்குமார் என்பவரின் வீடு உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தினர்.கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலக கண்காணிப்பாளராக இருந்த குணசேகரனின் குரும்ப பாளையம் வீட்டிலும் சோதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்