தந்தை இறந்த நிலையிலும், பிளஸ் 1 தேர்வெழுதிய மாணவர்
சிவகாசி : சிவகாசியில் ராணுவ வீரரான தந்தை இறந்த நிலையிலும் பிளஸ் 1 மாணவன் பொது தேர்வு எழுதச் சென்றார்.சிவகாசி ஸ்டேட் பேங்க் காலனியில் வசித்தவர் சத்தீஸ்கரில் எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் பரமசிவம் 50. இவரது மனைவி ஷீலா பிரியா. இவர்களது மகன்கள் தர்ஷன் பிளஸ் 1, யாகேஷ் 6 ம் வகுப்பு, ஸ்ரீவதன் ப்ரீ கேஜி படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் பரமசிவம் சத்தீஸ்கரில் மாரடைப்பால் இறந்தார்.பரமசிவத்தின் இறுதிச் சடங்கிற்காக அவரது உடல் சிவகாசிக்கு கொண்டுவரப்படாத நிலையில் பிளஸ் 1 படிக்கும் தர்ஷன் நேற்று தேர்வு எழுத பள்ளிக்கு செல்வதற்கு முன்பாக உயிரிழந்த தனது தந்தையின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தேர்வு எழுத சென்றார். பின்னர் மாலையில் சிவகாசிக்கு கொண்டுவரப்பட்ட பரமசிவத்தின் உடலுக்கு அரசு திருத்தங்கல் சப் இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்கு நடந்தது.தர்ஷன் கூறுகையில், தனது தந்தையின் கனவை நிறைவேற்றி, தானும் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற இன்றைய தினம் துக்க நிலையிலும் தேர்வு எழுத சென்றேன் என்றார்.